1968க்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாகியும் அந்தக்கிராமங்களில் உணர்வோடு உறைந்து நிற்கிறது வெண்மணி. சாரைசாரையாக அணிவகுத்து வரும் உழைப்பாளிகளும் அவர்களது குடும்பங்களும் சோகமும் துக்கமுமாகதான் உள்ளே நுழைகிறார்கள். நினைவிடத்தில் வெடித்துப் பீறிடுகிற உணர்வின் முழக்கங்கள் வானைப் பிளக்கின்றன. அப்படியே அதே வெப்பத்தோடும் காத்திரத்தோடும் ஒரு எரிமலை உறங்குவது போல் காட்சி தருகிறது அந்த நினைவாலயம்... முகம்பொத்தி கதறி அழவேண்டும் போல் அவஸ்தையும் துடிப்பும் நெஞ்சுக்குள் ஏற்படுகிறதா? அது வேறொன்றுமில்லை. நெருப்பில் எரிந்தபோது மரணித்த அந்த குழந்தைகளின் வலி அது..! ஒவ்வொரு ஆண்டும் வெண்மணி நாளன்று மழை பொழிகிறது. சேறும் சகதியுமாக.. சின்னஞ்சிறு மைதானத்தில் உட்கார இடமில்லாமல்... கருத்தரங்கோ பொதுக்கூட்டமோ எங்கே நின்று கேட்பதெனத் தெரியாமல்.. உழைப்பாளிகளின் கூட்டம் இப்படித்தான் இருக்கும். காவல்துறையினர் அங்குமிங்குமாக ஓடினாலும் அங்கே ஒரு சிறு பதட்டம் கூட கிடையாது. இவ்வளவு மக்கள் கூட்டத்தை எப்படியெல்லாம் பிரம்மாண்டப்படுத்தியிருப்பார்கள் மற்றவர்கள்..! ஆனால் எந்தப் பிரம்மாண்டமும் அங்கில்லை. வெண்மணி தியாகமும் அங்குவரும் மக்கள் கூட்டமும் தான் பெரிய பிரம்மாண்டமாக காட்சித் தருகிறது. குடிசை என்பது குடிசை அல்ல. வரலாற்றின் பிரம்மாண்டம் தோழர் இராமய்யாவின் குடிசை!
- கே.பாலபாரதி