tamilnadu

நடிகர் விஜய் கார் வழக்கு

சென்னை, ஜன. 28 - நடிகர் விஜய்க்கு சொந்தமான சொகுசு கார் வழக்கு முடியும் வரை எந்த  நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நடிகர் விஜய் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதற்கான நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதற்காக 400 விழுக்காடு அளவிற்கு வணிகவரித் துறை  அபராதம் விதித்தது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நுழைவு வரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், அதை செலுத்த தாமதம் ஏற்பட்டது. நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அபராதம் விதித்தது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், விசாரணை முடியும் வரை அபராதத்தை வசூலிக்க எந்த  கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வணிக  வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.