tamilnadu

img

சித்த மருத்துவமனைகளிலும் அரசு பணியாளர்க்கு இலவச மருத்துவம் - ஈட்டுதவித் தொகை

ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

 மதுரை,ஜூலை 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின்  கோரிக்கையை ஏற்று, சித்த மருத்து வமனைகளிலும் அரசு பணியா ளர்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி.நன்றி தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு சுகாதாரத் திட்டத்தில் (CGHS) உள்நோயாளிகள் அல்லாத பிற சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படும் இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை இதுவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இந்த வசதி சித்த மருத்துவத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடம்  நேரிலும், கடிதங்கள் வாயி லாகவும் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தேன். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஜுலை 24 ஆம் தேதி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ இனிவரும் காலங்களில், தனியார் சித்த மருத்துவமனைகளிலும் இந்த வாய்ப்பு அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.  இது நவீன சித்த மருத்துவ துறைக்கும், தொன்மையான தமிழ் மரபு மருத்துவத்திற்குமான மிகப்பெரிய வெற்றி. எனது கோரிக்கையை ஏற்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.