பெரம்பலூர்,நவ.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய போராட்டத்தால் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில் தீண்டா மைச் சுவர் தகர்க்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடலூர் கிராமத்தில் தலித் மக்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த தீண்டா மைச் சுவர் தகர்க்கப்பட்டது. இந்த கிராமத்தில் 900 சாதி இந்து குடும்பங்களும், 550 தலித் சமூகத்தினரின் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடலூர் கிராமத்தில் அரசு சார்பில் 1972 இல் வெட்டப்பட்ட பொதுக்கிணறும் 2002 இல் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகமும் உள்ளது. மோட்டார் மூலமாக பொதுமக்கள் அனைவரும் அனைத்து சமூகத்து குடும்பங்களும் கிணற்றை பயன்படுத்தி வந்தனர். இந்தப் பொதுக்கிணற்றின் தண்ணீரை மகளிர் சுகாதார வளாகத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இவற்றின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் 100 அடி நீளம், 15 அடி உயரத்தில் சுவர் ஒன்றை சாதி இந்துக்கள் எழுப்பியிருந்தனர். தர்மராஜ் என்பவரின் மாட்டுத் தொழு வத்தில் இருந்து மகளிர் சுகாதார நிலையம் வரை இந்த சுவர் நீண்டு இருந்தது. இதனால் பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்லும் நிலை உள்ளது.
போராட்டங்கள்
சுவர் எழுப்பியதைக் கண்டித்தும், பெண்கள் பொதுக் கழிப்பறையை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுவரை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டன. 2022 நவம்பர் 7 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பாடலூர் குயவர் இன மக்கள் 36க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்குப் பின், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனுவை அளித்த னர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்பி) அலுவலகத்துக்கு தொடர் நடவடிக்கைக்காக இந்த மனு அனுப்பி வைக்கப்படும் என்று சொன்ன தன் பேரில் 17.11.2022 அன்று எஸ்பியை சந்தித்து அவரிடம் நடவடிக்கை குறித்து வலியுறுத்தப் பட்டது. சுவர் எழுப்பியதால் பாதிக்கப் பட்ட அக்கிராமத்தின் மிகவும் பிற்பட்ட சமூகத்து மக்களும் இப்போராட்டத் தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தகர்ப்பு
நவம்பர் 19 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, பொதுக் கிணறு மற்றும் பாதையைத் தவிர்த்து 100 அடி நீள 15 அடி உயர சுவர் மாவட்ட நிர்வாகத்தால் உடைக்கப் பட்டது. இப் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஊழியர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மையம் வாழ்த்துக்களையும், உடனடி தலையீடு செய்த அதிகாரி களுக்கு பாராட்டுக்களையும் தெரி வித்துள்ளது.