கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை (மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை) அறிவித்தார். அது செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த இலவச பேருந்து பயணம் பல பெண்களுக்கு ஒரு கசப்பான அனுபவத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது, பெரும்பாலான இலவச பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்பதில்லை. பேருந்தை நிறுத்துமாறு கைகளை காட்டினாலும் நிறுத்தப்படுவதில்லை. சில பேருந்துகள் நிற்பது போல வந்து, வேகமாக கடந்து சென்று விடுகின்றன. பெண்களும் சரி; அடுத்து வரும் இலவச பேருந்தில் ஏறலாம் என நிறுத்தத்திலேயே காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அடுத்து வரும் பேருந்தும் நிற்காமலேயே சென்று விடுகிறது. இப்படியே 3, 4 பேருந்துகள் சென்று விடுவதால், பெண்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இப்படி வரும் பேருந்துகள் சிலவற்றில் (காலை, மாலை பள்ளி-பணி நேரங்களைத் தவிர) கூட்டமே இருப்பதில்லை. ஆனாலும் நிற்காமலே செல்கின்றன. குறிப்பிட்ட நிறுத்தத்தில் பயணிகள் இறங்க வேண்டியிருந்தால்தான் பேருந்தை நிறுத்துகின்றனர். சில பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தைவிட்டு சற்றுத் தள்ளி நிற்கின்றன. பெண்கள் ஓடிச் சென்று ஏறும் நிலை உள்ளது. மேலும், அவர்கள் ஏறுவதற்குள் பேருந்தை நகர்த்தியும் விடுகின்றனர்.
ஏழை, எளிய வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, இலவச பேருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் மீதான எதிர்ப்பார்ப்பும் மக்களுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால், பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால், அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் மட்டுமன்றி, கட்டுமானத்துறையில் சித்தாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், ஜவுளிக் கடை உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியவில்லை. சித்தாள் போன்ற வேலைகளில் ஊதிய இழப்பு மட்டுமன்றி, அன்றைய நாள் வேலையிழப்பையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நிறுவனங்களில் பணியாற்றுவோர் உரிமையாளர்களின் கண்டிப்புக்கு உள்ளாகின்றனர். அதேபோல பணிமுடிந்து குறித்த நேரத்திற்குள் வீடுகளுக்கும் திரும்ப முடிவதில்லை. இவர்களுக்காக குழந்தைகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதன்பிறகு உணவு சமைத்துக் கொடுத்து, உறங்கி காலையில் மறுபடியும் வழக்கமான பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டியுள்ளது.
மேலும், சில பேருந்துகளில் நடத்துநர்கள் பெண்களை அவமரியாதையாக நடத்துகின்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரை சேர்ந்த மூதாட்டி ஒருவரை தரக்குறைவாக பேசிய நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற அளவிலான உதாரணம்தான். “பஸ் கூட்டமே இல்லாமதான போகுது..., அப்புறம் ஏன் நிற்காம போகுது; இந்த பஸ்ச நம்பி குறிப்பிட்ட இடத்துக்கு நேரத்திற்கு போகணும். இப்படி நிற்காம போனா எப்படி நாம போக முடியும்; இத புகார் பண்ணணும்; எத்தன தடவ புகார் பண்றது. மிச்சப்படுத்தற 10 ரூபா டிக்கெட் காசுல நம்ம பிள்ளைங்களுக்கு பிஸ்கட் வாங்கித் தர்றோம்.. இனிமே அது இல்லேன்னு நினைச்சிட்டு, டிக்கெட் கூட எடுத்துட்டுப் போயிடலாம்.. எதுக்கு இவ்வளவு அவமானப்படணும்...?” என்ற புலம்பலை பல பகுதிகளிலும் கேட்க முடிகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது.
மேலும், சில பேருந்துகளில் நடத்துநர்கள் பெண்களை அவமரியாதையாக நடத்துகின்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரை சேர்ந்த மூதாட்டி ஒருவரை தரக்குறைவாக பேசிய நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற அளவிலான உதாரணம்தான். “பஸ் கூட்டமே இல்லாமதான போகுது..., அப்புறம் ஏன் நிற்காம போகுது; இந்த பஸ்ச நம்பி குறிப்பிட்ட இடத்துக்கு நேரத்திற்கு போகணும். இப்படி நிற்காம போனா எப்படி நாம போக முடியும்; இத புகார் பண்ணணும்; எத்தன தடவ புகார் பண்றது. மிச்சப்படுத்தற 10 ரூபா டிக்கெட் காசுல நம்ம பிள்ளைங்களுக்கு பிஸ்கட் வாங்கித் தர்றோம்.. இனிமே அது இல்லேன்னு நினைச்சிட்டு, டிக்கெட் கூட எடுத்துட்டுப் போயிடலாம்.. எதுக்கு இவ்வளவு அவமானப்படணும்...?” என்ற புலம்பலை பல பகுதிகளிலும் கேட்க முடிகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது.