சென்னை,ஜூலை 26- தீபாவளி சிறப்பு இனிப்புகளை ரூ. 200 கோடிக்கு விற்பனை செய்ய ஆவின் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பு மற்றும் விற்பனை இலக்கு தொடர்பாக ஆய்வு செய்து, தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாகவும் தயாரிக்க உத்தரவிட்டார். மேலும் கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும், விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார். கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டி திட்டமிட வேண்டும் என்று உத்தரவிட்டார். காஜூ கட்லீ, நட்டி அல்வா, மோத்தி பாக், காஜூ பிஸ்தா ரோல் நெய் பாதுஷா ஆகிய இனிப்பு வகைகள் அனைத்தும் 250 கிராம் பாக்கெட்டிகளில் கிடைக்கும். அதேபோல் இனிப்பு தொகுப்பு (காம்பே பாக்ஸ்) 500 கிராம் பாக்கெட்டில் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனிப்புகளை வாங்குவதற்கு தெற்கு மண்டலத்தில் 9444728505 செல்பேசியிலும் வடக்கு மண்டலம் - 9566860286 மத்திய மண்டலம் - 9790773955 என்ற எண்ணிகளிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTn முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கலாம்.