காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவுத் தலை வர் ஆ.கோபண்ணா ஆங்கிலத்தில் எழுதிய “மாமனிதர் நேரு-அரிய புகைப்பட வரலாறு” எனும் நூலின் தமிழாக்கம் வெளிவந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குறித்த அவதூறு களை பாஜக பரிவாரம் அன்றாடம் அவிழ்த்துவிட்டு வரும் நிலையில், அந்த மாமனிதரைப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும். இந்த நூலுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வழங்கியுள்ள முன்னுரையில் ஒரு அரசியல் மெய்ஞானியான நேரு வகுப்பு வாதத்திற்கு எதிரான துணிவுடன் நின்றார் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வழங்கியுள்ள அணிந்துரையில் நவீன இந்தியா விற்கு வடிவம் கொடுப்பதற்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பைப் பற்றி நினைவுபடுத்த வேண்டியிருக் கிறது என்று பொருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலின் தனிச்சிறப்பு என்னவென்றால், புகைப்படங்களைக் கொண்டே நேருவின் வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதற்காக பல ஆண்டுகள் செலவு செய்து புகைப்படங்களை தேடிக் கண்டுபிடித்து பேருழைப்பை செலுத்தியுள்ளார் ஆ. கோபண்ணா. நேருவின் குடும்பப் பின்னணி யிலிருந்து துவங்கும் இந்த நூல், விடுதலைப் போராட்டத்தில் அவர் பங்கேற்றது, அவருடைய சிறை வாசம், குடும்ப வாழ்க்கை, தமிழ்நாட்டுக்கும் நேருவுக்கு மான தொடர்பு, நாடு பிளவுண்ட தருணத்தில் காந்தி யடிகளோடு இணைந்து ஒற்றுமையை நிலைநாட்ட நேரு மேற்கொண்ட முயற்சிகள், ஒரு கடுமையான சூழலில் தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நேருவின் பன்முக ஆற்றல் என 606 பக்கங்களாக இந்த பெருநூல் விரிகிறது. ஒரு வகையில் ஒரு தனி மனி தரின் வரலாறாக மட்டுமின்றி இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் இந்த நூல் விளங்குகிறது. குறிப்பாக, 9 ஆண்டுகளுக்கும் மேலாக நேரு சிறையிலிருந்துள்ளார். செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு நிலையில் பொருளா தார சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். அவருடைய மனைவி மற்றும் தாயார் உடல் நலிவுற்றிருந்த நிலை யிலும் அவர் சிறையில் இருந்த நாட்கள் கொடூர மானவை.
இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்கும் வாய்ப்பு சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு ஆகிய இருவருக்கும் இருந்த நிலையில் மகாத்மா காந்தியின் தேர்வு நேருவாக இருந்தது எந்த அளவுக்கு பொருத்தமானது என்பதற்கு இந்த நூல் சாட்சியமாக நிற்கிறது. குறிப்பாக இந்தியாவின் அரசியல் சாசனம் மதச்சார்பற்றதாக வடிவமைக்கப் பட்டதற்கும், அயல்துறை கொள்கை அணிசேரா கொள்கையாக இருந்ததற்கும் நேருவின் பங்களிப்பு மகத்தானது. மொழிவழி மாகாணங்கள் அமைப்பதிலிருந்து தேசிய மொழி, தேசியக் கொடி, தேசிய கீதம் என நவீன இந்தியாவின் சரியான பாதை களைத் தீர்மானிப்பதில் நேரு ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது. அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பழமைவாதிகளை சமாளித்துக் கொண்டே இந்தியா விற்கு ஒரு நவீன முகத்தைத் தர நேரு பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார். நேருவை புகழ்ந்துரைப்பதாக மட்டும் இந்த நூல் அமையவில்லை. மாறாக, அவர் எடுத்த சில சர்ச்சைக்குரிய முடிவுகளின் பின்னணியையும் விளக்க முயன்றுள்ளது.
நேருவுடன் பல்வேறு விஷயங்களில் முரண்படு பவர்கள் கூட அவருடைய ஜனநாயகத் தன்மையை ஏற்பார்கள். அன்றைய பிரபல கார்ட்டூனிஸ்ட் சங்கரிடம் தான் பிரதமராகிவிட்டதால் என்னை கேலி செய்வதை விட்டுவிடாதீர்கள் என்று நேரு கேட்டுக்கொண்டதும், அவர் அதையே ஒரு நூலின் தலைப்பாக்கி “என்னை விட்டுவிடாதீர்கள்” என்று நேரு குறித்த கார்ட்டூன் களை தொகுத்து வெளியிட்டதும் இன்றைய சகிப்புத் தன்மையற்ற சூழலில் பெரும் வியப்பை உருவாக்கக் கூடியது. அதுமட்டுமின்றி, சாணக்யா என்ற புனை பெயரில் நேருவே பல ஆண்டுகள் தன்னைத்தானே விமர்சித்து எழுதியுள்ளார். இதை எழுதுவதே அவர்தான் என்பதே வெகுகாலத்திற்குப் பின்பே தெரிந்திருக்கிறது. தன்னுடைய முன் கோபத்தை அவரது கட்டுரையில் கடிந்துள்ளார். அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங் களின் போது நேருவின் குறுக்கீடுகள், பிறகு நாடாளு மன்ற விவாதங்களில் அவர் முழுமையாக பங்கேற்ற விதம் அனைத்தும் விரிவாக இந்த நூலில் பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா. சபைக் கூட்டத்தின் போது அமெரிக்காவுக்குப் பயந்து உலக நாடுகளின் தலை வர்கள் கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்க மறுத்த போது, நேரு அவர் தங்கியிருந்த விடுதிக்கே சென்று அவரோடு உரையாடியதும், கியூபா வின் அமைச்சராக இருந்த சேகுவேரா இந்தியாவுக்கு வந்து நேருவுடன் விவாதித்த பிறகு ஒரு தாத்தா பேரனை சந்தித்தது போல இருந்தது இந்த சந்திப்பு என்று குறிப்பிட்டதும் சுவையான நிகழ்வுகள். நேரு இன்றைய சனாதனவாதிகளால் இந்த அளவுக்கு வெறுக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் இந்த நூலை படித்தால் போதும்; எல்லாவற்றையும் தலை கீழாகக் கொட்டிக்கவிழ்க்க ஆர்எஸ்எஸ் பரிவாரம் துடிக்கும் சூழலில் நேருவின் பாதை என்னவாக இருந்தது என தெரிந்துகொள்ள மட்டுமல்ல, இந்தியா வின் பாதை என்னவாக இருக்க வேண்டும் என புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இந்த நூலும் ஒரு ஆயுதமாக திகழ்கிறது.
மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு
ஆ.கோபண்ணா
வெளியீடு: நவ இந்தியா பதிப்பகம்,
காமராஜ் பவன்,
573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை 600 006.
விலை: 2500