‘தீக்கதிர்’ நாளேடு, நல்லதை நாடியும், அல்லதைச் சாடியும் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இத்தனை ஆண்டுகள் நாளேடு தொடர்வதே போற்றப்பட வேண்டிய சரித்திர நிகழ்வாகும். தொடர்ந்து நடத்துவதுடன், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பதிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘தீக்கதிர்’ இப்போது தனது ஐந்தாவது பதிப்பை நெல்லைச் சீமைப் பதிப்பாக வெளிக் கொண்டு வருவதற்கு முடிவெடுத்து வரும் செப்டம்பர் 22 முதல் வெளியிடுவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் தோழர் பிரகாஷ் காரத் அவர்கள், தீக்கதிரின் ஐந்தாவது நெல்லைப் பதிப்பை துவக்கிவைத்துச் சிறப்பிக்கிறார் என்ற நற்செய்தியும் வந்திருக்கிறது. ‘தீக்கதிர்’ கம்யூனிஸ்ட் சித்தாந்தக் கொள்கை விளக்கம் செய்கிறது என்பதை விட அகில உலக நடப்புகளையும், இந்திய தேசிய , தமிழ் மாநில நடப்புகளையும் மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்து மக்கள் படிக்கும் நல்லதொரு ஏடாகத் திகழ்கிறது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை வெளியிடுவதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் சுட்டிக்காட்டும் அறிவார்ந்த இதழாக விளங்குகிறது.