tamilnadu

img

விவசாயிகள் போராட்டத்திற்குப் பழிவாங்கும் பட்ஜெட் -

புதுதில்லி, பிப்.2- மோடி அரசாங்கம், விவசாயிகள் போராட்டத்திற்கு பழிவாங்கும் அடிப்படையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறது என்றும், இது கடும் கண்டனத்திற் குரியது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: பாஜக அரசாங்கத்தின் பட்ஜெட், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உதாசீனம் செய்திருக்கிறது. இது விவசாயிகள் போராட் டத்தின் வெற்றியைப் பழிவாங்கும் விதத்தில் அமைந்தி ருப்பதுபோலவே தோன்றுகிறது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கோ, விவசாயத் தொழிலாளர்களுக்கோ நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் எந்த அறி விப்பும் இல்லை.

கிராமப்புற வளர்ச்சி நிதி ஒதுக்கீடு வீழ்ச்சி

விவசாய விளைபொருள்களை அரசாங்கம் கட்டு படியான விலையில் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும், கடன்களை ரத்து செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர். இதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. மொத்த ஒதுக்கீடு சென்ற 2021-22 திருத்திய மதிப்பீட்டுத் தொகையான 474750.47 கோடி ரூபாயைக்காட்டிலும் இப்போது 370303 கோடி ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக வீழ்ச்சி ஏற்பட்டி ருக்கிறது. அதேபோன்று கிராமப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் 5.59 சதவீதத்தி லிருநது 5.23 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம், விவசாய விளைபொருள்களைக் கொள்முதல், பயிர் இன்சூரன்ஸ், உணவு மற்றும் உர மானியம் ஆகியவைகளுக்கான ஒதுக்கீடுகளிலும் கடுமையாக வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கொள்முதல், உரமானியம் 28, 25 சதவீதம் குறைப்பு

இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வ தற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 28 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இது கொள் முதலில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்திடும். அதேபோன்று உர மானியத்திலும் 25 சதவீதம் வெட்டு ஏற்படுத்தப்பட்டி ருக்கிறது. இவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கிடும்.

பயிர்க்காப்பீட்டு திட்ட நிதி ரூ.500 கோடி குறைப்பு

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டி ருந்தது, இப்போது 15,500 கோடி ரூபாயாக குறைக்கப் பட்டிருக்கிறது. அதேபோன்றே பிரதமர்-கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டிலும் 9 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது. இத்திட்டத்தால், சென்ற முறை 14 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடையும் என்று கூறப் பட்டிருந்தது, இப்போது 12.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியும், ஒவ்வொருவருக்கும் ஆறாயிரம் ரூபாய் என்று கொடுத்தால்கூட அதற்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 68 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இரட்டிப்பாக்கவில்லை; சுருங்கச் செய்திருக்கிறது

பயிர் வளர்ப்புக்கான ஒதுக்கீடு 26 ஆயிரம் கோடி ரூபாயும் (18 சதவீதமும்), உணவு சேமிப்பு மற்றும் கிடங்குக்கான ஒதுக்கீடு 84 ஆயிரம் கோடி ரூபாயும் (28 சதவீதமும்) குறைக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் சராசரியாக மாதத்திற்கு 10,218 ரூபாய் வருமானம் ஈட்டுவதாகக் கூறியிருக்கிறது. ஆயினும் விவசாயத்தில் ஒரு நாளைக்கு ஒருவர் ஈட்டும் வருமானம் என்பது சராசரியாக வெறும் 27 ரூபாய் மட்டுமேயாகும். இவ்வாறு நரேந்திர மோடி அரசாங்கம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்குப் பதிலாக, கடந்த ஏழு ஆண்டுகளில் சுருங்கச் செய்தி ருக்கிறது.

வேலைவாய்ப்பு திட்ட நிதியில் கடும் வெட்டு

கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் வேலை வாய்ப்புகள் சுருங்கியிருக்கும் அதே சமயத்தில், மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. 2021-22இன் திருத்திய மதிப்பீடு 98 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள அதேசமயத்தில், இந்த பட்ஜெட்டில் 73 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, இத்திட்டத்தின்கீழ் 100 நாட்கள் வேலை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றால் 2.64 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அப்போதுதான் இப்போது விவசாயத்  தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையாக இருந்துவரும் 21 ஆயிரம் கோடி ரூபாயையே அளித்திட முடியும். மோடி அரசாங்கம் ஏழை விவசாயத் தொழிலா ளர்களுக்கு முன்னுரிமை அளித்திடத் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒன்றிய பட்ஜெட் உண்மையில் ஏற்றத்தாழ்வை மேலும் விரிவுபடுத்திடும், வறுமை, வேலையின்மை, பசி-பட்டினிக் கொடுமைகளை மேலும் அதிகப்படுத்தி டும். எனவே, கூருணர்வற்ற மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்த பட்ஜெட்டை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அனைத்துக் கிளைகளும் மிகவும் விரிவான அளவில் எதிர்த்திட வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.            (ந.நி.)