மியாவ் மியாவ்
பூனைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களோடு வாழ்ந்து வருகின்றன. அவற்றின் ஓசைகளாலும் வேடிக்கையான விளையாட்டுத்தனங்களினாலும் நம்மை மகிழ்விக்கின்றன. பூனைகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பூனைகள் அன்பிற்குரிய உறவினராகவே கருதப்படுகின்றனவாம். டச்சு மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 50% நபர்கள், அவை தங்கள் குடும்பம் என்கின்றனராம். மூன்றில் ஒரு பகுதியினர் அவை குழந்தைகள் அல்லது நல்ல நண்பர்கள் என்று கருதுகின்றனர். அவை விசுவாசமாகவும் ஆதரவாகவும் புரிந்துகொள்பவையாகவும் உள்ளனவாம். அமெரிக்காவிலும் நாய்களைப் போலவே பூனைகளும் குடும்பத்தில் முக்கிய உறுப்பினர். உணவு, பொம்மைகளைவிட மனிதர்களுடன் ஊடாடுவதையே பூனைகள் விரும்புகின்றனவாம். நாம் இன்னொரு மனிதருடன் பேசுவதிலிருந்து அவைகளுடன் பேசுவதை, அவைகளால் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள முடிகிறது. அவைகளைக் கொஞ்சுவதேற்கேற்ற ‘மியாவ்’களை அவை வளர்த்துக் கொள்கின்றனவாம். சமூக தனிமையை குறைக்க பூனை வளர்ப்பு உதவுகிறதாம். இதய நோய்கள், பக்கவாதம் போன்றவையினால் ஏற்படும் மரண ஆபத்துகளும் குறைகிறதாம். ஆனால் இது பூனை வளர்ப்பினால்தான் என்று உறுதிபடக் கூற முடியாது. குடல் நுண் உயிர் தொகுதி மேம்பாடு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு மற்றும் குறைவான வீக்கம் ஆகியவையும் பூனை வளர்ப்புடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. மன அழுத்தமும் குறுகிய காலத்திற்கு குறைகிறது. ஆனால் பூனைகள் நோய்வாய்ப்பட்டால், அவற்றை கவனிப்பது சுமையாகும். அதனால் வளர்ப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம். பூனைகளிடமிருந்து சில கிருமிகள் நம்மை தொற்றலாம். அவற்றிடமிருந்து உதிரும் மயிர்கள், தோல்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கையுறைகளை அணிவது, கழிவுகளை அவ்வப்போது அகற்றுவது,இடங்களை சுத்தம் செய்வது பூனைகளை படுக்கையறைகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பது போன்றவற்றால் இதை தவிர்க்கலாம். அவற்றுடன் பழகுவதால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தகவமைத்துக் கொண்டு ஒவ்வாமை ஏற்படுவது குறைவான வாய்ப்பு அமைவதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்கிறார் அடிலைட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விலங்கு மற்றும் கால்நடை பேராசிரியர் சூசன் ஹேசல்.
சென்னையிலிருந்து ஏவப்பட்ட மறுபயன்பாட்டு ராக்கெட்
புத்தாக்க நிறுவனம் ஸ்பேஸ் ஜோன் ‘ரூமி’ எனப் பெயரிடப்பட்ட மறுபயன்பாட்டு ராக்கெட் ஒன்றை 2024, ஆகஸ்ட் மாதம் சென்னையிலிருந்து விண்ணிற்கு ஏவியது. அதற்கு முன் ஏவப்பட்ட மாதிரிகள் சரியாக இயங்கவில்லை. இருந்தபோதிலும், அந்த தோல்விகளுக்கான காரணத்தை விரிவாக ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறிந்தனர். அதன் வடிவையும் செயல்பாட்டையும் மேம்படுத்தினர். ராக்கெட்டை ஏவும் நகரும் தளத்தை உண்டாக்க ஆறு மாதங்கள் ஆயிற்றாம். அதன் பாதையை துல்லியமாக நிர்ணயித்த பின்னர் குடிமை விமான இயக்குனர், விமானப் படை மற்றும் விமான நிலைய முகவாண்மை ஆகியவற்றிடமிருந்து அனுமதி பெறப்பட்டதாம். ‘ரூமி’ கியூப் எனப்படும் கன சதுர செயற்கைக்கோள்கள் மூன்றையும் பீகோ எனப்படும் 50 கோள்களையும் சுமந்து சென்றது. கியூப் கோள்கள் காஸ்மிக் கதிர்வீச்சு, புறஊதாக் கதிர் வீச்சு மற்றும் காற்றின் தரம் போன்ற வளிமண்டல தரவுகளை சேகரிக்கும். பீகோ கோள்கள் உந்துவிசை மீட்டர் அளவுகள், ஓசோன் அளவுகள், வான்வெளி உயரம் போன்றவற்றை பதிவு செய்யும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கும்போது, சுற்று சூழல் இயக்கவிதிகளை ஆழமாகவும் குறிப்பிட்ட நிலைகளிலும் புரிந்து கொள்ளலாம். இதற்கு ‘ரூமி’ பொருத்தமான ஒன்றாக உள்ளது.
குறிவைத்து தாக்கும் குறுபுரதம்
புற்று நோய்க்கு காரணமான செல்களுக்கு கதிர்வீச்சை நேரடியாக எடுத்துச் சென்று அவற்றை மட்டும் அழிக்கும் குறு புரதத்தை ஆய்வாளர்கள் உண்டாக்கியுள்ளனர். தங்கள் மேற்பரப்பில் நெக்டின்-4 (Nectin-4) எனும் புரதத்தை கொண்டிருக்கும் புற்று நோய் செல்களை இவை குறிவைத்து தாக்குகின்றன. மற்ற ஆரோக்கியமான செல்களை அழிப்பதில்லை. இந்த குறுபுரதம் ‘கதிர்வீச்சுமருந்து’ என்றும் அழைக்கப்படுகிறது. பல்வேறு விதமான புற்றுநோய் கட்டிகளும் இந்த கதிர்வீச்சை உள்வாங்கிக்கொள்கின்றன என்றும் காட்டியுள்ளனர்.