சென்னை, நவ. 23 - டாக்டர் ரெக்ஸ் சற்குணம் எழுதியுள்ள ‘சென்னை மதுரை சியாட்டில்’ என்பது இடதுசாரி கருத் துக்களை வலுவாக முன்வைக்கும் முதலாவது அரசியல் நாவல் என்று தமுஎகச மூத்தத் தலைவர் சிகரம் ச. செந்தில்நாதன் கூறியுள்ளார். சிகரம் ச.செந்தில்நாதன் சென்னையில் செவ்வாயன்று (நவ.22) நடைபெற்ற இந்த நாவல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்றுப் பேசிய அவர், இந்த நாவலைப் படிக்கத் தொடங்கிய போது பழைய முறையிலான நாவல் என்றுதான் நினைத்தேன். ஆனால் படித்து முடித்தபின், இது நவீன முறையில் எழுதப்பட்டுள்ள நாவல் என்ற முடிவுக்கு வந்தேன். அது மட்டுமல்ல நான் அறிந்தவரை தமிழில் வெளியாகி இருக்கும் முதலாவது அரசியல் நாவல் இது என்றும் கருதுகிறேன் என்றார்.
அமெரிக்கா சொர்க்க பூமியா?
நாவலுக்குள் அரசியல் வருவது வேறு; நாவலே அரசியலாக - இடது சாரி கருத்துக்களை சொல்வதாக அமைவது வேறு. இரண்டாவது முறை யிலான நாவல் இது. அமெரிக் காவை சொர்க்கபூமி என்று நினைக்கிற காலத்தில், தன் மகளோ, மகனோ அமெரிக்காவில் இருப்பதை பெருமையாகப் பேசும் காலத்தில், அன்று முதல் இன்று வரையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோலுரித்துக் காட்டுவது இந்நாவ லின் சிறப்பு. கதாநாயகியான வேல்வழி அமெரிக்காவில் தீவிர வாதிகளால் சுட்டுக் கொல்லப்படு கிறார். இது சினிமாத் தனமல்ல; சிந்தனைக் களம் என்று பார்க்கி றேன்; பாராட்டுகிறேன் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிய கண்ணோட்டம்
மதத்தை முன்வைத்து அரசியல் நடத்தப்படும் காலத்தில், மதத்தை அபின் என்று மார்க்ஸ் கூறியதாக சுருக்கிப் பார்க்கப்படும் சூழலில், பாத்திரப் படைப்புகளின் மூலம் மார்க்சிய கண்ணோட்டத்தை நாவல் புரிய வைக்கிறது. மதம் என்ற கோட்பாட்டை, நிறுவனமயமாதலை மார்க்சியம் நிராகரிக்கிறதே தவிர, மதத்தையே நிராகரிக்கவில்லை என்பது தெளிவாக விளக்கப்படு கிறது என்றும் செந்தில்நாதன் குறிப்பிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டப் பின்புலத்தில் எதிர்க்கப்பட வேண்டி யவர் யார்? தவிர்க்கப்பட வேண்டி யவர் யார்? என்பதில் மதுரை மருத்து வக் கல்லூரி மாணவர்களில் தாமும் ஒருவராக இருந்து பெற்ற அனுப வத்தை டாக்டர் ரெக்ஸ் சரியாக நாவலில் முன்வைத்திருக்கிறார். அதில் எனக்கும் உடன்பாடுதான் என்று அவர் கூறினார்.
நீதியரசர் அரிபரந்தாமன்
விழாவில் நூலினை வெளியிட் டுப் பேசிய நீதியரசர் அரிபரந்தாமன், இந்த நாவலின் நாயகி வேல்விழி பிறந்தநாளில் (நவ. 22) நூலினை வெளியிட வேண்டும் என்ற ஆசிரி யரின் எண்ணம், வேல்விழியைக் கதாபாத்திரமாக பார்க்காமல் வாழும் ஒருவராகவே பார்த்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்றார். 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது டாக்டர் ரெக்ஸ் படித்த மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல சாதி, மதம், மூடநம்பிக்கைகள் இதை ப்பற்றி எல்லாம் சமூக நோக்கிலும், மருத்துவ நோக்கிலும் பதிவு செய்வதற்கு பாத்திரங்களைப் பயன்படுத்தி இருப்பதும் புதிய அணுகுமுறையாகும். இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்த அண்ணாவின் பெயரிலான விமான நிலையத்தில் அவரது பெயர் இந்தியில் இருப் பதைக் கூட நாவலின் ஓட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பு மேலோங்கி இருக்கும் காலத்தில் இந்த நாவல் வந்திருப்பது முக்கிய மானது என்று நீதியரசர் அரிபரந்தா மன் தெரிவித்தார்.
மருத்துவர் கனகசபை
நூலின் முதற்படியைப் பெற்றுக் கொண்டு பேசிய மருத்துவர் கனக சபை, பொதுவாக கல்விப்புலம் சார்ந்த நூல்கள் படிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த என்னை நாவல் படிக்கவைத்திருக்கிறார் டாக்டர் ரெக்ஸ் என்றார். இது போன்ற படைப்புகளை மேலும் மேலும் கொண்டு வர வேண்டும் என்ற விருப் பத்தையும் அவர் வெளியிட்டார். முன்னதாக மருத்துவர் சு. வைத்தியநாதன், தமுஎகச மாநிலப் பொருளாளர் சைதை ஜெ., தென்சென்னை மாவட்டத் தலைவர் சி. எம். குமார், செயலாளர் க. மலர் விழி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். பாரதி புத்தகாலய நிர்வாகி க.நாகராஜன் வரவேற்றார். மயிலை கிளைச் செயலாளர் பா. நீலகண்டன் நன்றி கூறினார். மாவட்டக் குழு உறுப்பினர் வசந்த் நிகழ்வை ஒருங் கிணைத்தார். இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே. ரங்கரா ஜன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வை தமுஎகச மாநில துணைத்தலைவர் மயிலை பாலு ஒருங்கிணைத்தார்.