கடந்த பல ஆண்டுகளாக நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கேரள மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நமது தேசத்தின் பல வளங்குன்றிய அல்லது போதிய வளர்ச்சி பெறாத பல மாநிலங்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாக அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தை பொறுத்தவரை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப் பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து செயல்படுவதுடன் மக்களின் பங்களிப்புடன் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதனால் நமது தேசத்தில் அதிகவளம் கொண்ட மாநிலமான கேரளாவில் இது ஒரு பொதுச் சொத்துக்களை (Community Assets) உருவாக்கி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதைய காலநிலை மாற்றப் பிரச்சனைகள் (Climate change issues) அதிகளவில் பொருளாதார மற்றும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் நடைமுறை சூழலில் நூறு நாள் பணிகள் பல விஞ்ஞானரீதியாக திட்டமிடப்பட்டு காலநிலை மாற்றப் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வகையிலும், அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் செய்கிறது. அத்தகைய நடைமுறைச் சூழலில் தற்போது கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நூறு நாட்களை தாண்டியும், இதில் பணி புரியும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இரு நூறு நாள் வேலைத்திட்டமாக...
கடந்த 2017ஆம் ஆண்டில் சிறிய அளவில் உள்ளாட்சித் துறை வாயிலாக பழங்குடியினர் வளர்ச்சி நிதியை கொண்டு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய பழங்குடியின பகுதியாகிய அட்டப்பாடி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் செயலாக்கம் வாயிலாக பழங்குடியின குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் வெகுவாக உயர்ந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்கள் பயன்பெறும் நோக்கிலும், அவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை நூறு நாள் திட்டத்தில் ஏற்படுத்தவும், அதனை உறுதி செய்யவும் மாநிலத்தின் பல வளர்ச்சித் துறைகளின் பங்களிப்புடன் நூறு நாட்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது இரு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக கேரள மாநிலம் முழுவதும் 2022-23 காலகட்டத்தில் சுமார் 22,083 பழங்குடியின குடும்பங்கள் பொருளாதாரரீதியாக அதிகளவில் பயன் பெற்றுள்ளனர். டிரைபல் பிளஸ் (Tribal plus) என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட 200 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்களே அதிகளவில் பயன்பெற்று உள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளை செய்யவும், தங்களின் மருத்துவத் தேவைகளை சந்திக்கவும் தற்போது கேரள மாநில பழங்குடியின மக்களுக்காக மேற்கொண்டு வரும், அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் பெரிதும் துணை புரிகிறது. இவ்வாறு கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் நமது தேசத்திற்கே, பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது. இதுபோல நமது நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பழங்குடியினர் வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டால் நம்மால் குறுகிய காலத்தில் சமுதாயத்தில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒரு பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
தி இந்து ஏட்டில் (25.11.22) வெளியான செய்தியின் தமிழ் சுருக்கம்
முனைவர் தி.ராஜ்பிரவின்