கடந்த ஐம்பதாண்டு காலமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், தலைவர், மதிப்புறு தலைவர் மற்றும் பல்வேறு நிலைகளில் அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு வயது எழுபது நிறைவடைகிறது. இதையொட்டி, அவர் இன்று வரை படைத்துள்ள இலக்கிய, அரசியல், சமூகப் படைப்புகளைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வரங்கமும், கொண்டாட்டமும் கோவை மாநகரில் ஜூலை 7 அன்று நடைபெற்றது. 300 பேர் அமரக்கூடிய அரங்கில் இடமே இல்லாமல், வெளியே நின்று கொண்டு உரைகளைக் கேட்குமளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோவை தமுஎக சங்கத்தின் கிளை, தனது 250-ஆவது இலக்கியச் சந்திப்பு நிகழ்வையொட்டித் திட்டமிட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சிதான் எனினும், கிட்டத்தட்ட ஒரு மாநில சிறப்பு மாநாட்டைப்போல விமரிசையாக நடந்தேறியது.
கரிசல் குயில் கிருஷ்ணசாமி,தஞ்சை மணவாளன்,கி.வெ. வீரமணி ஆகிய இசைக்கலைஞர்கள் பாடிய பாடல்கள், அரங்கின் கொண்டாட்ட மனநிலைக்கு மேலும் வளம் சேர்த்தன. குறிப்பாகக் கிருஷ்ணசாமியின் குரலில் பாரதி, பாரதி தாசன்,வண்ணதாசன் ஆகியோரின் கவிதைகள் இசைப்பாடல்கள் வடிவில் ஒலித்த போது,அவை மனதில் மீட்டிய ராகங்கள் அபூர்வமானவை. மாவட்டத் தலைவர் தி.மணி தலைமையுரையாற்றினார். கோவையில் தொடர்ந்து 250 மாதங்களாக ஒரு மாதம் கூடத் தவறாமல் நடந்து வந்துள்ள இலக்கியச்சந்திப்பு, அவற்றில் இதுவரை அறிமுகமாகியிருக்கும் நூல்கள், வருகை தந்த ஆளுமைகள் பற்றியெல்லாம் சுருக்கமாக விவரித்த அவர், இன்று ச.தமிழ்ச் செல்வனின் படைப்புலகம் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் சொன்னார். பொருளாளர் அருள்மணி அனைவரையும் அன்போடு வரவேற்றார். ச.தமிழ்ச்செல்வனின் 52 நூல்களிலிருந்து தேர்வு செய்து தொகுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பான ‘ச. தமிழ்ச்செல்வன் படைப்புலகம் ஓர் அறிமுகம்’ என்ற கமலால யன் தொகுத்த நூலினை வழக்கறிஞரும், நாவலாசிரிய ருமான ச.பாலமுருகன் வெளியிட,தோழர்கள் ப.பா.ரமணி, மு.கோதண்டராமன்,கி.ராமதாஸ்,எழுத்தாளர் இளஞ்சேரல், கவிஞர் பெ.சக்தி வேல்,சி.தனபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘இலக்கியச் சந்திப்பு -250 தடங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும்,வழக்கறிஞருமான மு.ஆனந்தன் சிறப்பா கத் தொகுத்துப் பேசினார். ஆரம்பத்திலிருந்து இடம் கிடைக்காமல், பல்வேறு சிரமங்களைக் கடந்து எப்படி ஒரு மாதம் கூடத் தவறாமல் இந்த இலக்கியச் சந்திப்பு நடந்து வந்திருக்கிறது என்ற விவரங்கள் உண்மையில் மலைப் பூட்டின.
கவிஞர் சிற்பி
இந்நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், ச. தமிழ்ச்செல்வன் கதைகளை வாசித்ததின் காரணமாக அவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்ற பேரவா ஏற்பட்டது. அதன் காரணமாக தனக்கும் அவருக்குமான சந்திப்பு நடந்தது. அதைத் தம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறிப் பகிர்ந்து கொண்டார். பாவனை என்ற சிறுகதையில் எழுத்தாளர் குழந்தைகளின் மனநிலையை எப்படி கலை நயத்தோடும் நுட்பத்தோடும் எழுதியுள்ளார் என்பது குறித்து மிக நேர்த்தியானதொரு தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் , விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்தனர்.
நாஞ்சில் நாடன்
எழுத்துக்கும் வாழ்வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லா மல் வாழ்ந்து வரும் படைப்பாளர் ச. தமிழ்ச்செல்வன். பாசா ங்கில்லாத மிக எளிமையான மனிதர். தன் மீது வைக்கும் விமர்சனங்களைக் காது கொடுத்து கேட்பதோடு அல்லா மல் தவறிருக்கும் பட்சத்தில் சரி செய்து கொள்ளக்கூடிய மனிதர் என்று மிக நேர்த்தியாய் தம் கருத்துக்களைப் பதிவு செய்தார்.
சு.வேணுகோபால்
“ச.தமிழ்ச்செல்வன் சிறுகதை களில் நிலம் மனிதர்கள்” என்ற தலைப் பில் எழுத்தாளர் சு.வேணுகோபால் உரையாற்றினார். அப்போது அவர் கரிசல்காட்டு மக்களின் கசங்கிய வாழ்க்கையை ச.தமிழ்ச்செல்வன் கதைகளில் எவ்வாறெல்லாம் நுட்ப மாகப் பதிவு செய்திருக்கிறார் என்ற கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.
கவிஞர் நந்தலாலா
“அபுனைவும் இலக்கியமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அபுனைவு படைப்புகள் குறித்து மிகச் சுவைபடவும் நெகிழ்ச்சியாகவும் எடுத்துரைத்தார். ஜிந்தாபாத் ஜிந்தா பாத் நூலில் இடம் பெற்றுள்ள தொழிற் சங்க அனுபவங்கள் குறித்த பகிர்வி னையும் இருளும் ஒளியும் நூலில் இடம் பெற்றுள்ள அறிவொளி இயக்க அனு பவங்கள் குறித்தும் மிக சிறப்பாக எடுத்துரைத்தார். அது வாசகனை உடனே வாசிக்க தூண்டும் விதத்தில் அமைந்தது .
எழுத்தாளர் தீபலட்சுமி
“படைப்புகள் எங்கும் பெண் வாழ்வு” (எசப்பாட்டை முன்வைத்து) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார். பெண்மை குறித்த தமிழ்ச்செல்வ னின் பார்வையை எசப்பாட்டு, இடை யிலாடும் ஊசல் போன்ற நூல்களை முன்வைத்து பேசினார்.
ஆதவன் தீட்சண்யா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர் சங்கத்தின் செயலாளர் ஆத வன் தீட்சண்யா பேசுகையில், ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த “முதல் 50 ஆண்டுகள் சிறுகதை தடங்கள்” என்ற நூலினை முன்வைத்து மிகச் சிறப்பாக உரையாற்றினார். சிறுகதையின் வர லாற்றை எழுத ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் கிட்டத்தட்ட 5000 சிறுகதை களுக்கு மேல் வாசித்துள்ளதை பெரு மையோடு பதிவு செய்தார். 50 ஆண்டு கால சிறுகதை வரலாற்றினை எழுத மிகக் கடுமையாக உழைத்து உள்ளார் எனவும் 57 எழுத்தாளர்கள் எழுதியுள்ள அத்தனை படைப்புகளையும் படித்து அதன் வரலாற்றினை பதிவு செய்துள் ளார் என்று மிகவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
சு.வெங்கடேசன்
தமிழ்ச்செல்வன் ஒரு விசித்திரமான கலைஞர். எந்தச் சமயத்திலும்,எந்த இடத்திலும் தேங்கிப் போய் விடாமல், தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியைப் போன்றவர். நாங்கள் கல்லூரியை முடித்து வெளியே வந்த நேரத்தில்,அன்றைக்கு இலக்கிய இஸங்களைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துப் பேசியும் எழுதியும் செயல் பட்டுக் கொண்டிருந்தார் தமிழ். அன்றைக்குப் பார்த்ததைப் போலவே, இன்றைக்கும் ஆர்.பாலகிருஷ்ணனின் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலைப் படித்து முடித்து விட்டு அதைப் பற்றிப் பேசலாம் என்று இவரைக் கூப்பிட்டால்,” நான் அந்தப் புத்த கத்தைப் படித்து முடித்து விட்டு ஒரு ஸ்லைட் ஷோ நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று முன்னால் போய்க் கொண்டே இருக்கிறார்! போய்க் கொண்டேயிருக்கிற,மாறிக் கொண்டேயிருக்கிற, தன்னை எப்போ தும் மாற்றத்திற்கு உட்பட தயார் நிலை யில் வைத்துக் கொண்டே இருக்கிற ஒரு மனிதன்,ஒரு நாளும் தேங்கிப் போக மாட்டான். பழையவனாகிப் போக மாட்டான். பழைய காலங்களின் பிரதி நிதியாக இருக்கவே மாட்டான் என்ப தற்குத் தமிழ்ச்செல்வன் ஒரு சிறந்த உதாரணம் என்று மிகவும் பெரு மிதத்தோடு கூறினார்.
ச.தமிழ்ச்செல்வன் ஏற்புரை
“நல்ல இலக்கியம் சமூகத்தில் விவாதங்களை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் அது அதன் இலக்கை அடையவில்லை என்று பொருள் “என்று தொடங்கினார். “அப்படியான விவாதத்தை உருவாக்கிய நூல்கள் தமிழ்ச்சூழலில் அதிகம் வர வில்லை என்பதுதான் வருத்தம்” என்று வேதனை தெரிவித்தார். “ஏன் நிறைய நூல்களை எழுதவில்லை என்று பல ரும் என்னைக் கேட்கிறார்கள். இன்னும் நிறைய சிறு கதைத் தொகுப்புகளை எழுதி இருந்தால் மேடையில் காலை ஆட்டிக்கொண்டு வேறு மாதிரி தினுசாக அமர்ந்திருப்பேன். எழுதாததால்தான் பவ்வியமாக அமர்ந்திருக்கிறேன் “ என்று சொல்லி சிரிப்பூட்டினார். இது அவருக்கே உரிய மேடை பேச்சின் சிறப்பு. “இலக்கிய வாசிப்பு என்பது ஒரு சனநாயக இயக்க மாக மாற வேண்டும். புத்தகங்களை வகை வகை யாய் வாங்கி பதுக்குகிறவர்களின் எண்ணிக்கையை விட வாங்கி படிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது” என்று வருத்தம் தெரிவித்தார். “இலக்கியச் சந்திப்புகளில் ஒரு நூலை ஒருவர் வாசித்து பலரும் கேட்பது என்பது ஆரோக்கியமற்ற அணுகுமுறை, ஒரு நூலை அனைவரும் வாசித்து அவர்கள் அனைவருமே திறனாய்வு செய்வதே சிறந் தது” என்று இலக்கிய அமைப்புகள் செய்யத் தவறி யதை அடிக்கோடிட்டு தெரிவித்தார்
“நண்பர்களின் நூல்களை வாசிப்பதைப் போலவே அனைத்துத் தரப்பினரது நூல்களையும் வாசிக்க வேண்டும். கருத்தியல் ரீதியாக முரணாக இருக்கும் எழுத்தாளர்களின் நூல்களைப் படித்த பிறகே நிரா கரிப்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும் “ வாசித்தல் கலையில் நடுவு நிலைமையோடு ஒரு வாசகர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “இலக்கிய அமைப்பை நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதை விசாலமாக வைத்திருத்தல் வேண்டும். அப்படி வைத்தால் தான் அவர்கள் சார்ந்த அணி வலுப் பெறும் “என்று அமைப்புகளை வளர்த்தெடுப்ப தற்கான குறிப்பை அழகாக உதிர்த்தார்.” நம்முள் வேறு வேறு அடையாளங்கள் இருந்தாலும் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உண்மையான உணர்வு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும். மனிதர்களை மனிதர்களாக பார்க்க வேண்டியது நமது தலையாய கடமை”என்று பொதுமை தன்மையை இனிதாக போதித்தார். “கருத்தியல்களோடு மட்டுமே முரண்பட வேண்டுமே ஒழிய , மனிதர்களோடு முரண்படக் கூடாது. மனிதர்களை மட்டுமல்ல நூல்களையும் திறந்த மன தோடு அணுகவேண்டும்” என்று சமத்துவத்தின் தன்மையை உணர்த்தினார்.
“எளிமையாகச் சொல்வதே கடினமானது. அந்தக் கலையை ஒவ்வொரு படைப்பாளியும் கற்றிருக்க வேண்டும். எதையுமே காட்சி ரூபமாக சொல்லுங் கள். அதன் பதிவுகள் தான் மனித மனங்களை ஊடுரு வும்” என்று படைப்பு மனதை தெளிவுபடுத்தினார். “பிறர் விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டையும் ஒன்றாக வைத்துப் பாருங்கள். ஒரு படைப்பாளனின் வளர்ச்சிக்கு இவைகள் மட்டுமே நீண்ட பயணத்திற் கான தண்டவாளங்களாக இருக்கும்”. “மூத்த எழுத்தாளர் என்று என்னை அறிமுகம் செய்வதை நான் விரும்புவதில்லை.காரணம் என் உட லுக்கு மட்டும் தான் 70 வயது ஆகிறது. என் மனதில் பால்ய காலத்தின் கடிகாரம் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறது. “எழுத்திலும் வாழ்விலும் உயிர்ப்போடு இருப்பதற்கு இது உதவும் என்றார். “என் தவறை சுட்டிக்காட்டினால் நான் திருத்திக் கொள்வேன். என் குறைகள் எனக்குத் தெரியும். குழந்தைகளிடமிருந்தே நாம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்”என்று மனது திறந்தார். “ நமது வாழ்க்கை யை நமக்கான வாழ்க்கையாக மாற்றாமல் எல்லோ ருக்குமான வாழ்க்கையாக மாற்றவேண்டும் என்று முத்தாய்ப்பாய் முடித்தார்.
தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பெரும் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் சக படைப்பாளி யைக் கொண்டாடிக் களிப்புற்றது கோவை மாவட்ட தமுஎகச. தோழர்கள் தங்க முருகேசன், அ. கரீம் உள் ளிட்ட தோழர்கள் மிக நேர்த்தியாக ஒருங்கிணைப்புச் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக நடத்தி யுள்ளார்கள். கருத்தரங்கத்திற்குப் பல்வேறு மாவட் டங்களிலிருந்தும் எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டனர்.