tamilnadu

img

தங்கத்தில் எழுதப்பட்ட மொழி - சு.வெங்கடேசன் எம்.பி.,

தீயர் என்ற இனத்தைச் சேர்ந்த அந்துவன் என்பவன் ஆநிரை கவர்ந்த பூசலில் கூடலூரில் வீழ்ந்து மாண்டான். அவனது நினைவாக கல்வெட்டு தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையில் உள்ளது.  இந்தியாவிலேயே இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட நடுக்கற்களில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவையே மிகவும் பழமையானவையாகும். இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழிக் கலப்பின்றித் தமிழில் எழுதப்பட்டுள்ளது இவற்றின் தனிச்சிறப்பாகும். இக்கல்வெட்டுகள் மதுரையில் இருந்து தொலைவில் (அக்காலத்தில் காடுகள் சூழ்ந்திருந்த) ஒரு சிற்றூரில் கிடைத்திருப்பது சங்க காலத்திலேயே தமிழகத்தில் பரவலாக எழுத்தறிவு இருந்தது என்பதற்கான உறுதியான சான்றுகளாகும். சிந்துவெளி நாகரிக காலத்தில் தங்கம் என்ற ஒரு உலோகம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு பின்தான் தங்கம் கண்டறியப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் எழுதப்பட்ட தெய்வத்தின் பெயரோ, சக்கர வர்த்தியின் பெயரோ இன்றைக்கு வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

முதன்முதலில் தங்கத்தில்  எழுதப்பட்ட மொழி தமிழ்மொழி, எழுதிய எழுத்து  கோதை என்ற பெண்ணின் பெயராகும். சங்கத்தமிழ் என்பது மட்டும் நமது பெருமையல்ல, தங்கத்தமிழ் என்பதும் நமது மகத்தான பெருமைகளிலே ஒன்றாகும். வைகைக் கரையில் இருக்கும் தேனூரில் 2014-ஆம் ஆண்டு புயல் காற்றின்போது ஊருக்கு நடுவில் உள்ள மரம் கீழே விழுந்து  விட்டது. அந்த மரத்தின் வேர்ப் பகுதிக்கு அடியில்  மண்சட்டி கிடைத்தது. அந்த மண்சட்டிக்குள் ஏழு தங்கக் கட்டிகள் இருந்தன. அந்த தங்கக் கட்டியில் பிராமி எழுத்தில் கோதை என்று எழுதப்பட்டிருந்தது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்ற நிலமாக தமிழ்நாடு விளங்கியது. 28 கி.மீ சுற்றளவிற்குள் 20 இடங்களில் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துகள் இருக்கின்ற ஒரே நகரம் உலகத்திலேயே மதுரை என்பது நமக்கெல்லாம் பெருமை. உலகத்திலேயே இரண்டாயிரம்  வருடத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ள ஒரே இடம் கீழடி.  கடவுள்களுக்குத்தான் சிலை உள்ளது. சந்நிதிகளும் உள்ளது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர்களுக்கு சிலை வைத்த பெருமை நமக்கே உண்டு. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சங்கப்புலவர் சந்நிதி உள்ளது. இங்கு 43 புலவர்களின் சிலைகள் உள்ளன. அறிவையும், தமிழையும் தெய்வத்திற்கு நிகராகப் போற்றிய நகரம் மதுரை. ஜனநாயகப்படுத்தப்பட்ட கல்வியின் தாயகம் மதுரை.

மதுரை புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரையிலிருந்து...