tamilnadu

img

மேகங்களின் மகாநாடு - உதயசங்கர்

வானத்தில் மேகங்களின் மகாநாடு கூடியது. சிவப்பு மேகம், கருப்பு மேகம், ஆரஞ்சு மேகம், தங்கமேகம், வெள்ளை மேகம் குட்டி மேகம் குண்டு மேகம் இத்துனூண்டு மேகம் எல்லாம் கலந்து கொண்டன.
மேகங்களின் தலைவரான கருப்பு மேகம் முழங்கியது.
“ நம்மை யாரும் மதிப்பதில்லை. காற்று நம்மை ஊதித்தள்ளுகிறது. மழை நம்மை கரைக்கிறது. சூரியன் நம்மைச் சுடுகிறது. நிலா நம்மைக் குளிர வைக்கிறது. பூமியில் மனிதர்களோ நம்மைக் கொல்வதற்கு நச்சு வாயுக்களை அனுப்புகிறார்கள்..”
“ ஆமாம் ஆமாம் ஆமாம் “ என்று மற்ற மேகங்களும் கத்தினார்கள்.
வெள்ளை மேகம் கோபத்துடன் கத்தியது,
“ நாம் இல்லை என்றால் மழையில்லை.
நாம் இல்லை என்றால் வானத்துக்கு அழகில்லை.
நாம் இல்லை என்றால் கதைகள் இல்லை.
நாம் இல்லை என்றால் பாடல்கள் இல்லை.”
“ ஆமாம் ஆமாம் ஆமாம் “ என்று மற்ற மேகங்களும் முழங்கினார்கள்.
” இனி நாம் மழை பொழிய மாட்டோம்..” என்றது ஆரஞ்சு மேகம்.
“ இனி நாம் கதைகளில் வரமாட்டோம்..” என்றது மஞ்சள் மேகம்.
” போர் புரிவோம். எல்லாருடனும் போர் புரிவோம். “ என்றது சிவப்பு மேகம்
போர் போர் போர்.
எல்லாமேகங்களும் கொடி பிடித்து முழக்கமிட்டார்கள். ஊர்வலமாய் போனார்கள். அந்த ஊர்வலத்தைப் பார்த்து கீழே பூமியில் இருந்த மனிதர்கள் அஞ்சினார்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று நினைத்தார்கள்.
ஆனால் குழந்தைகள் மேகங்களின் ஊர்வலத்தைப் பார்த்தார்கள்.,
“ ஐய்.. யானை, குதிரை, நத்தை, பாம்பு, மயில், ஒட்டகம், ரயில், பஸ், எல்லாம் ஊர்வலம் போகுது....” என்று வியந்து ஆச்சரியத்துடன் சொன்னார்கள்.
அவ்வளவுதான். எல்லாமேகங்களும் தாங்கள் கையில் வைத்திருந்த கொடிகளைக் கீழே போட்டன.
அப்போது சூரியன், “ கவலைப்படாதீர்கள் இந்தக் குழந்தைகள் உலகத்தைக் காப்பாற்றுவார்கள்..” என்று சொல்லி ஒளிவீசியது.
மேகங்கள் குழந்தைகளைப் பார்த்துச் சிரித்தன.
குழந்தைகளும் சிரித்தார்கள்.