பேரறிஞர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருமே பன்முகத்திறன் கொண்ட பெரும் ஆளுமைகள். இந்த குறிப்பிட்ட விசயம் பற்றி இவர்களுக்கு தெரிந்தி ருக்காது என்று சட்டென்று சொல்லிவிட முடியாது. ஏங்கெல்ஸ் பல மொழிகள் அறிந்தவர். ரஷ்யன், பாரசீகம், ஜெர்மன் மொழிகள், பிரெஞ்ச், போர்த்துக்கீஸ், ஐரிஸ், ஸ்பானிஷ், ருமேனிய, பல்கேரிய மொழிகள், ஸ்காண்டினேவிய மொழிகள், மிலானீஸ், டச்சு-ஃபிரிஸ், கெய்லிக்- அயர்லாந்து (Gaelic-Ireland), ஸ்கு லேஸ்விக்-ஹோல்ஸ்தீன் (Schleswig-Holstein) என 12 மொழிகளில் பேசுவார், எழுதுவார். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை வாசிப்பார். அடிப்படை ஐரோப்பிய மொழிகளை ஏற்கனவே முற்றாக அறிந்திருந்த, பண்டைய கிரேக்க, லத்தீன் மொழிகளை நன்கு கற்றிருந்த அவர், அவரே சொல் கின்றபடி 1850இல் ஆர்வத்துடனும் ஆதாரப் பூர்வமாகவும் ரஷிய மொழியைக் கற்றுக் கொள்ள முற்பட்டார். “...வழக்கில் உள்ள மொழிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததும், மிகவும் வளமிக்கதும் ஆன மொழிகளில் ஒன்று ரஷ்ய மொழி என்பதாலும் அதன் பரந்துவிரிந்த இலக்கியத்துக்காகவும் எல்லா விதத்திலும் கற்கத்தகுந்த மொழி யாக உள்ளது...”.
கிழக்கத்திய பிரச்சனையை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ப தால் பாரசீக மொழியை கற்கத்தொடங்கி னார். 1850ஆம் ஆண்டுகளின் இறுதியில் பண்டைய ஜெர்மன் மொழிகளைக் கற்றார். 1864இல் நடந்த டென்மார்க் போரும், ஸ்குலேஸ்விக்-ஹோல்ஸ்தீன் ஆகிய வற்றுக்காக நடந்த போராட்டமும் ஸ்காண் டினேவிய மொழிகளைக் கற்கத் தூண்டின. 1860ஆம் ஆண்டுகளின் இறுதியில் முதலாவது அகிலத்தில் அயர்லாந்து பிரச்சனை கூர்மையாக விவாதிக்கப்பட்ட போது கெய்வீக்-அயர்லாந்து மொழி களைக் கற்கத்தொடங்கினார். இதே ஆண்டுகளில் டச்சு-ஃபிரிஸ், ஸ்காட் லாந்து மொழிகளைக் கற்றார். தமது வாழ்வின் இறுதிக்காலத்தில் ருமேனிய, பல்கேரிய மொழிகளைப் பயின்றார். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்று சொன்னால் அம்மொழி பேசும் மக்களின் வரலாறு, கலாச்சாரம், இலக்கி யம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தி அம்மொழியின் சிறப்பியல்புகள், தோற்றம், வளர்ச்சிப்போக்கு போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்வது என்றே அவர் புரிந்துகொண்டு இருந்தார். மிகப்பல மொழிகளைக் கற்றிருந்ததன் பயன் என்னவெனில், மொழியியல், ஒப்பு நோக்கு மொழியியல் ஆகியவற்றின் பொதுவான பிரச்சனைகளைப் பயின்று இந்த அறிவியலுக்கும் உறுதியான மார்க்சிய அடித்தளத்தை அமைத்துத்தர இத்திறன் அவருக்கு உதவியது. மொழியியல் மட்டுமல்ல, அவர் உலக இலக்கியங்களை தொடர்ந்து கற்று வந்தார். பல்வேறு இனமக்களின் இலக்கி யத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் மட்டுமின்றி வரலாற்று வளர்ச்சிக்கு முந்தைய காலத்து இலக்கியத்திலும் எங்கெல்ஸ் மிகப்பெரும் நிபுணராக மிளிர்ந்தார்.
1850ஆம் ஆண்டுகளின் முடிவில் அவர் இயற்கை அறிவியல் தளங்கள் ஆன வேதி யியல், இயற்பியல், உடலியல், உயிரியல் ஆகியவற்றைத் தெளிவாகக் கற்றறியத் தொடங்கினார். (ஏவ்ஜெனியாஸ்டெனோவா எழுதிய பிரடெரிக் ஏங்கெல்ஸ் வாழ்க்கைச் சுருக்கம், 1985 முன்னேற்றப் பதிப்பகம்)
தான் கற்றறிந்த மொழிகளின் சிறப்பை எத்தனை அழகான சொற்களில் வர்ணித்து கொண்டாடுகின்றார் அவர் பாருங்கள்! மொழிகள் யாவும் மானுட சமூ கத்தின் உழைப்பால் வளர்ந்த, வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு ஆன கருவியே என்ற அறிவியல் பார்வை கொண்ட ஒருவ ரால் மட்டுமே இப்படிப் பார்க்க முடியும்! ஏங்கெல்ஸ் எழுதிய கவிதை இது.
ஓ, ஹோமர், உனது மொழி, மாக்கடலின் பெரும் பெரும் அலைகள்! ஏச்சிலெசின் அதலபாதாளத்தில்- அந்தப்பள்ளத்தாக்கில் ஒன்றன் மேல் ஒன்றென உருண்டோடும் பாறைகள்!
ரோமானியர்களின் வெண்கலக்குரல்! மாவீரன் சீசர், படை வீரர்களிடம் பகன்ற மணிமொழிகள்! பாறையின் கூர்முனைப்போல் ஈட்டியெனக் கிளம்பும் வசனங்கள் எப்படிக் கிரகிப்பது? பரந்து பரவிக்கிடக்கும் அவற்றிலிருந்து முகிழ்க்கப் போவதோ-ஒரு மாபெரும் மாளிகை!
இத்தாலியத்தாய் இயம்பிய இன்றையப் புது மொழியோ எழில் மிகுந்தது! இனிமை மிக்கது! இப்புவிக்கோளத்தின் மையத்திலே உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்ட அழகுப்பூங்கா! அற்புதப் பூங்கா! மணம்மிக்க மலர்க்காடு! காவியத்து நாயகன் அங்கு கவிதை புனைகின்றான்! அழகு ரோஜாக்கள்... அப்பப்பா! அள்ள அள்ளத் தீராதவை! அரியோஸ்டோ மாலை தொடுக்கின்றான்.... என்னருமை ஸ்பானிஷ் மொழியே! ஓ! உச்சிமரத்தின் ஒய்யார இலைகள் உலர்ந்து ஆடும்போது ஓடிவரும் காற்றின் சுகமே! புயற்காற்றுச்சூறை நீ! புராதன காலத்துச் சண்டமாருதப் பாட்டு நீ! உன் ஒலி கேட்டு திராட்சைக்கொடியில் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன! மரக்கிளையில் ஏறி அனைவரும் ஊஞ்சலாடுகின்றனர்!
போர்த்துகல் நாட்டின் பொன்மொழி- மலர்ப்படுகை நிறை கடற்கரையை நோக்கி வரும் அலைகளின் முணுமுணுப்பு! அதன் ஓசையிலே மேலைக்காற்றின் மெல்லிய இன்பம் எழுந்தோடி வரும்! பிரெஞ்சு மொழியின் குரலைக் கேட்போம்! அது பொங்கிவரும் பிரவாகத்தின் பேரொலி! அசைந்தாடி அதன் போக்கில் ஆனந்தமாக மணல்வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும் பாங்கு! ஆஹா! அற்புதம்! அதன் கலகலப்பு அலைகடலின் ஆர்ப்பரிப்பு! ஆங்கிலம்! நாளெல்லாம் வீசும் நற்காற்று! பச்சைப்பசேல் எனப்பசும்புல் மாவீரர்களின் நினைவுச்சின்னம் சுற்றிலும் பசுமைப்புதர்கள் சூறைக்காற்று அதனில் அது சடசடவெனச் சரிந்து விழுமா?! ஆ! ஜெர்மானியன் பகன்ற செப்புமொழியே! கடல் அலையின் மோதலில் முகிழ்க்கும் வெண் நுரை நீயே! தீவுக்கூட்டங்களின் எழிலைத் தூக்கிச்சுமக்கிற கூர்முனைப் பவளப்பாறைகளைச் சுத்தமாக்கி வருவாய்!
பாறைகளை நோக்கிவரும் பெரும்பெரும் அலைகள் எல்லாம் ஹோமரின் இனிய கீதமே! அங்கும் கூட பெரும் பெரும் பாறைகள் மோதி நொறுங்குகின்றன! அங்கு நீ படைத்தளபதியின் பாங்கான பகட்டான மாளிகையைப் பார்க்கலாம்! மணம் வீசும் மலர்த்தோட்டங்களைக் காணலாம்! மரஉச்சியின் இலைகளுக்கு இடையே பேரிரைச்சல் காதைத் துளைக்கும்! புல்வெளிகளில் ரீங்காரம் இடும் சிற்றோடைகளின் ஓசை மணற்குன்றுகளுக்கு மெருகூட்டுகின்றன! சுழன்று சுழன்று வீசும் காற்று வந்து நுழையும் மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் இதுவே ஜெர்மானிய மொழி! என்றுமுள இனியமொழி ஆயிரமாயிரம் அற்புத நிலை கண்ட மொழி!