சென்னை. மே 31- அதிகார மாற்றம் மற்றும் புனிதத்தின் அடையாளம் அல்ல செங்கோல் என்று தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் கூறினார். சென்னை காமராஜர் அரங்கத்தில் புதனன்று (மே 31) ‘தேசிய சிந்தனையாளர்கள் பேரவை’ சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஏ.கோபண்ணா, சட்டமன்ற உறுப்பி னர் பிரின்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் என்.ராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1947 ஆகஸ்ட் 14 அன்று நேருவை சந்திப்பதற்கு முன்பாக மவுண்ட் பேட்டன் ஆதீனங்களை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து அதை அவர் நேருவிடம் கொடுக்கச் சொன்னதாக சொல்வது அனைத்தும் கட்டுக்கதை. செங்கோல் குறித்து திமுக நிறுவனர் அண்ணாதுரை ஏற்கனவே திராவிட நாடு பத்திரிகையில் 24.8.1947 அன்று கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். விடுதலை பத்திரிகையில், அண்ணா வின் கட்டுரையை எடுத்து இப்போது வெளியிட்டுள்ளார்கள். அவர் களுக்கு பாராட்டுக்கள். அண்ணா வின் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள பத்திரிகை யாளர் கவிதா முரளிதரனுக்கு பாராட்டுக்கள். இன்றைய கால கட்டத்திற்கு இது மிகவும் முக்கிய மான பணியாகும். ஆதீனம் அளித்த செங்கோல் அதிகார மாற்றம் மற்றும் புனி தத்திற்கான அடையாளம் என்று தற்போதைய ஒன்றிய அரசு வாதிடு கிறது. அன்றைய பிரதமர் நேரு வுக்கு நினைவுப்பரிசாக ஒரு கோல் வழங்கப்பட்டபோது இந்தியா குடியரசாக ஆகவில்லை. அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகே இந்தியா குடியரசானது; ஜனநாயக மதச்சார்பற்ற சோசலிச குடியரசு என்று அறிவிக்கப்பட்டது. அதுவரை டொமினியன் அந்தஸ்தில் தான் இந்தியா இருந்தது. ராஜாஜிக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இதனை அவ ரது மகன் ராஜ்மோகன் காந்தி யும் சொல்லிவிட்டார். வேறு ஒரு எழுத்தாளரும் ஒன்றிய அரசு கூறுவது பொய் என்று சொல்லிவிட் டார். அதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஒருபேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார். நடக்காத நிகழ்வை நடந்ததாக சொல்வதற்கு இந்துத்துவா சிந்தனைதான் காரணம்.
ஆதாரம் இல்லை
செங்கோல் விவகாரத்தை பாஜக இன்று எழுப்ப இந்துத்துவா அரசியல் ஒன்றே காரணம். நாடாளுமன்ற திறப்பு விழாவை மடாதிபதிகளை வைத்து நடத்தி யதன் வாயிலாகவும் ஆதீனத்தை புகழ்ந்து பேசுவதாலும் தமிழ கத்தில் பாஜகவினருக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. தற்போதைய (திருவாவடுதுறை) ஆதீனம் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி யில், செங்கோல் குறித்து ஒரு விதமான ஆதாரமும் இல்லை; ஏற்கனவே என்ன சொல்லப் பட்டுள்ளதோ அதுதான் என்று தெரி வித்துள்ளார்.
அரசியல் லாபம்
செங்கோலை அல்லது ஆதீ னத்தை புகழ்வதால் பாஜக வினருக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தை குறிவைத்து அரசியல் லாபம் அடைய இதை செய்வதாக சிலர் சொல்கிறார்கள். இந்தியா ஒரு இந்து நாடு என்று அவர்கள் நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வேடிக்கையாக உள்ளது
உம்மிடி பங்காரு நகைக்கடை செய்துகொடுத்த ஒரு கோலை செங்கோல் என்று கூறி அதன் முன்பு பிரதமர் தரையில் சாஷ்டாங்க மாக விழுந்து கும்பிட்டுள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது. நினைவுப்பரிசாக நேருவிடம்கொடுத்த இந்த கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது. பிரதமருக்கு அளிக்கப் படும் நினைவுப்பரிசுகள் அருங்காட்சி யகத்தில் வைக்கப்படும். அதுதான் மரபு. அப்படித்தான் அலகாபாத் அருங் காட்சியகத்தில் அந்த கோல் வைக்கப் பட்டுள்ளது. அதனை ‘கோல்டன் ஸ்டிக்’ என்று (தங்கத்திலான கம்பு) என்று தான் எழுதி வைத்துள்ளார்கள். வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட அந்த 5 அடி கம்பு மீது நந்தி செதுக்கப்பட்டுள்ளது.
நினைவுப்பரிசுதான்
இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வு உலகில் மிகமுக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது. அந்த முக்கியமான நிகழ்வின்போது பலர் நேருவைச் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது அவருக்கு பலர் நல் வாழ்த்துக்களுடன் நினைவுப் பரிசு வழங்கினார்கள். தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களும் நேருவைச் சந்தித்து நாடு சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்கள். அதில் ஒன்று தான் இவர்கள் சொல்லும் செங்கோல். அந்த சந்திப்பின் போது செங்கோல் கொடுக்கப்படவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அதிகார மாற்றத் திற்கான குறியீடு அல்லது அடையாள மாக அதை யாரும் கருதவில்லை என்று தான் சொல்கிறோம்.
எது உண்மை?
நேரு பிரதமராக பதவியேற்ற நிகழ்வுதான் அதிகார மாற்றம். டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் சொன்னதாக இவர்கள் (பாஜக) சொல்லும் தகவல் அன்று எந்த பத்திரிகையிலும் வர வில்லை. அரசியல் நிர்ணய சபைக்கு செல்வதற்கு முன்பு இராஜேந்திரப் பிரசாத் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட் டன. அப்போது அக்னி குண்டத்தை சில தலைவர்கள் சுற்றிவந்தனர். அப்போது வயதான ஒரு பெண்மணி நேருவுக்கு திலகமிட்டார் என்பது உண்மைதான். ஆனால் அங்கு செங்கோல் எதுவும் வழங்கப்பட வில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை. செங்கோல் குறித்து மவுண்ட் பேட்டன் கூட எதுவும் சொல்ல வில்லை. அதிகார மாற்றம் நடை பெறும் போது கொடுத்திருந்தால் அங்கு இராஜேந்திர பிரசாத் இருந்தி ருக்க வேண்டும். ஆனால் அவர் இருக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையில் இது நடக்கவில்லை. நேரு வீட்டில் இந்த கோல் வழங்கப் பட்டுள்ளது. அதிகார மாற்றம் மற்றும் புனிதம் என்பதற்கான அடையாளம் இது என்று அப்போது எந்தப் பத்திரி கையிலும் எந்தச் செய்தியும் வர வில்லை. இது முற்றிலும் இவர்களு டைய (பாஜக) கட்டுக்கதை. அந்த கோல் அன்பின் காரணமாக கொடுக்கப்பட்ட நினைவுப்பரிசுதானே தவிர, அது அதிகார மாற்றத்திற்கான குறியீடு அல்ல. ஆதீனங்கள் விமா னத்தில் செல்லவில்லை. ரயிலில் தான் சென்றதாக புகைப்படத்துடன் இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது. இவ்வாறு என்.ராம் கூறினார்.
அரசியல் உள்நோக்கம்
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, செங்கோல் என்பது ஒரு பெருமையான விஷயம் இல்லை. மன்னர் ஆட்சியை நீக்கி மக்கள் ஆட்சி வந்தவுடன் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் மோடி மீண்டும் மன்னர் ஆட்சி கொண்டு வருவதற்கு இந்த செங்கோலை எடுத்து வரு கிறார். சோழ, சேர, பாண்டியர் தயாரித்த செங்கோல் இல்லை; அது உம்மிடி பங்காரு செட்டியார் செய்தது” என தெரிவித்தார்.