சென்னை, டிச.5- ஓமிக்ரான் பரவி வரும் தென்னாப்பிரிக்கா, போட்ஸ் வானா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகளை இந்தியா ‘`ஹிட்-லிஸ்ட்’ நாடுகள் என்று பட்டியலிட்டு வரையறுத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை வந்த 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த சிறுமி கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அதே விமானத்தில் வந்த 36 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை லண்டனில் இருந்து வந்த 25 வயது நபருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த ஒருவர் தொற்று காரண மாக நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த 5 பேரின் மாதிரிகளிலும் ஓமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பகுப்பாய்வு பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா அறிகுறி இருந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ‘இன்ஸ்டம்’ ஆய்வகத்துக்கும், சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட் ்டுள்ளது. அவர்களில் 4 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அச்சப்பட தேவையில்லை. நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டுள்ள வருக்கு எந்த வகை வைரஸ் தாக்கி இருக்கிறது டெல்டா வகை கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள 4 பேருக்கும் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் சில நாட்களில் ‘நெகட்டிவ்’ ஆகிவிடும். அதன்பிறகு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து 85 விமானங்களில் 12 ஆயிரத்து 188 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள். அவர்களை பரிசோதித்ததில்தான் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விமான பயணிகள் அனைவருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறமுடியாது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் முககவசம் அணிதல், கூட்டங்களில் சேர்வதை தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து கவனமுடன் இருந்தால் போதும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.