tamilnadu

img

நிகரகுவா ஜனாதிபதியாக நாளை ஓர்டேகா பதவியேற்பு

மனாகுவா, ஜன.8- நான்காவது முறையாக தொடர்ந்து நிகரகுவாவின் ஜனாபதியாகப் பதவியேற்கவிருக்கும் டேனியல் ஓர்டேகாவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து சர்வதேசப் பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர். மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நவம்பர் 7, 2021 ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான டேனியல் ஓர்டேகா 75 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரது கட்சியான சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும்பாலான இடங்களைப் பெற்றது. 2022 முதல் 2027 வரையில் அவரும், நாடாளுமன்றமும் பொறுப்பில் இருப்பார்கள். ஜனவரி 10 ஆம் தேதியன்று அவர் பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார். இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடரும் என்று உறுதிதெரிவித்துள்ள டேனியல் ஓர்டேகாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 30 நாடுகளில் இருந்து 250 பிரதிநிதிகள் வருகை தருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரதிநிதிகள் வருகை தருவது உறுதியாகவில்லை. வருகை தரும் குழுக்களில் ஜனாதிபதிகளும், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர் என்று துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ரொசாரியோ முரில்லோ தெரிவித்துள்ளார். மெக்சிகோ, பெலிஸ், கியூபா, பொலிவியா, வெனிசுலா, குவாதிமாலா, ஹோண்டுரஸ், கோஸ்டாரிகா, பனாமா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருகை தருகிறார்கள். மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து அதிகாரப்பூர்வ மான குழுக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, வியட்நாம், கம்போடியா, வடகொரியா,  ஈரான், பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அரசுக்குழுக்கள் தலைநகர் மனாகுவாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்றன. சாண்டினிஸ்டாவின் புரட்சிக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி தெரி வித்துக் கொள்வதாக முரில்லோ கூறியுள்ளார்.