tamilnadu

img

பட்டினம்பாக்கம் லூப் சாலையில் ரூ.10 கோடியில் நவீன மீன் அங்காடி

சென்னை, ஜன. 15 - பட்டினப்பாக்கம் லூப் சாலையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையின் இரு புரங்களிலும் மீன் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் அறிவித்தார்.  இதன்படி, ரூ.9.97 கோடி மதிப்பீட்டில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடிக்கான  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கப்படும். இந்த நவீன மீன் அங்காடி, சுற்று சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள், மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள் அமைக்கப்படும். அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் ஏற்படுத்தப்பட உள்ளது இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.