மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் உள்ள டோங்கிரியில் இருந்த ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான கேசர்பாக் என்ற 4 மாடி கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை 11.40 மணியளவில் திடீரென அந்த கட்டிடம் ஆட்டம் கண்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். சுமார் 55 பேர் உயிருடன் புதைந்தனர். விபத்தின்போது பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதற்றத்துடன் அங்கு திரண்டனர். இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வாகனங்களில் விரைந்து வந்தனர். கேசர்பாக் கட்டிடம் இருந்த பகுதி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலான பகுதி என்பதால் இடிபாடுகளை அகற்றும் பணிக்கு பொக்லைன் எந்திரங்களை வரவழைக்க இயலவில்லை. இதனால் இடிபாடுகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் வேன்களும், மீட்பு குழுவினர் வந்த வாகனங்களும் 50 மீட்டர் தூரத்துக்கு வெளியிலேயே தான் நிறுத்தப்பட்டு இருந்தன. மீட்பு படையினரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் மண்வெட்டிகள் கொண்டும், கைகளாலேயும் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க போராடினார்கள். அப்பகுதி மக்களும் மீட்புப்படையினருடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
சவாலான இந்த மீட்பு பணியின் போது கட்டிட இடிபாடுகளில் இருந்து 11 பேர் பிணமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் 6 ஆண்கள், 4 பெண்கள் ஆவர்.
மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில், கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.