மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேவேந்திரபட்னாவிஸ் அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யாரும் எதிர்பாராத சூழலில் தேசியவாதகாங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.
ஆனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆளுநரின் ஒரு தலைபட்சமான நடவடிக்கைக்கு சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பாஜக தலைமையிலான தேவேந்திரபட்னாவிஸ் அரசு சட்டசபையில் நாளை தனது பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நிரூபிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக இல்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும். வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும். முன்னதாக அவையின் மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.