மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
இந்நிலையில் புனே நகரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 5 பேர் பலியாகி இருந்தனர். புனே நகரின் சின்ஹாகட் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதேபோன்று புனே நகரின் சஹாகர் நகர் அருகே மற்றொரு உடலை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதேபோல் சிவப்பூர் கிராமத்தில் தர்கா ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 5 பேர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்து உள்ளது.
கனமழையை அடுத்து புனே நகர், புராந்தர், பராமதி, போர் மற்றும் ஹாவேலி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு புனே மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் ராம் விடுமுறை அறிவித்துள்ளார்.