சென்னை, ஆக. 12- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால், நீர்மட்டம் 85 அடியை தொட்டது. இந்த நிலையில் செவ்வாய் நள்ளிரவுக்குள் நீர் மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை செவ்வாயன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் அங்குள்ள அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் 90 விழுக்காடு நிரம்பி விட்டன.
84 அடி நீர்த்தேக்கும் உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 81.5 அடியாக உள்ளது. அணைக்கு நொடிக்கு 57, 000 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. நொடிக்கு 30,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 124 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் (கிருஷ்ணராஜசாகர்) தற்போதைய நீர்மட்டம் 122.30 அடியாக இருக்கிறது. அந்த அணைக்கான நீர்வரத்து நொடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கன அடி. நீர் வெளி யேற்றம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 315 கன அடியாக உள்ளது. மொத்தமாக அந்த இரு அணை களில் இருந்தும் நொடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயி ரத்து 315 கன அடி வீதம் காவிரியில் நீர் பாய்கிறது. அதே சமயம் ஞாயிறு மாலை, அந்த இரு அணைகளில் இருந்து நொடிக்கு 3 லட்சம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டதால், தற்போது தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் நீர் வருகிறது. ஒகேனக்கலில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் பாய்வதால், அங்குள்ள அருவி கள் மூழ்கின.
தற்போது மேட்டூர் அணைக்குச் செல்லும் நீரின் அளவானது நொடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் செவ்வாய் நள்ளிரவு க்குள் 100 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நீர்மட்டம் 90 அடியை எட்டும்பட்சத் தில், அணை திறக்கப்படும் என்று முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறி வித்திருந்தார். அதன்படி, காவிரி டெல்டா பாசனத்திற்காக அந்த அணையில் இருந்து செவ்வாயன்று(இன்று) தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே காவிரி கரைபுரண்டு ஓடுவ தால் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்ட த்தில் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரைபு ரண்டு ஓடும் நிலையில், கரையோரம் உள்ள நாகர்கோவில், நாடார் கொட்டாய் உள்ளிட்ட ஊர்களில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
அந்த பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வசித்த வர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதை அடுத்து, திருச்சி முக்கொம்பு அணையில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று அதிக அளவு நீர் காவிரியில் பெருக் கெடுத்ததால் முக்கொம்பு மேலணையில் 9 மதகு கள் அடித்துச் செல்லப் பட்டன. அங்கு தடுப்பு அமைக்கும் பணிகள் 38 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
‘உங்களின் அலட்சியத்தால் கடைமடை வரை தண்ணீர் செல்லாது’
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இதனை தொடர்ந்து செவ்வாய் (இன்று) காலை மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தண்ணீர் திறந்துவிட்டாலும் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேருவதற்கு இப்போது வாய்ப்பில்லை. உரிய காலத்தில் பாசனக் கால்வாய்கள், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும், பல ஆறுகளின் குறுக்கே பாலங்களின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமல் அரைகுறையாக இருப்பதாலும் அபரிமிதமான தண்ணீர் வந்தும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலைமைக்கு விவசாயிகள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும். எனவே, தமிழக அரசு காவிரி டெல்டா முழுவதும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் போதுமான அளவு சென்று சேரும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...
முக்கொம்பு அணை திறப்பதில் கவனம் தேவை
தென்மேற்கு பருவமழை கடுமையாகபெய்து வருவதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி அரசின் அலட்சியத்தால் முக்கொம்பு அணை உடைந்து 180 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. அதே போன்ற நிலைமை இந்த ஆண்டும் ஏற்படாமல் இருக்க படிப்படியாக தண்ணீரை அணையில் இருந்து திறந்து விடுவதன் மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும். நீர்நிலை உயரும், நிலத்தடி நீர் உயரும்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து...