tamilnadu

img

சாலை விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தன

பெரம்பலூர், ஆக.31-  பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி டாரஸ் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றது. லாரியை, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே குளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன்(45) ஓட்டினார். இதில் அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சிமெண்டு மூட்டை ஏற்றிய மினி லாரி வந்து கொண்டிருந்தது. மினி லாரியை, அரியலூர் மாவட்டம் கீழக்கா வட்டாங்குறிச்சி ராஜேஷ் (34) ஓட்டி வந்தார்.  அப்போது பெரம்பலூர்- அரியலூர் பிரதான சாலையில், குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே வளைவுப் பகுதியில் இரு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் லாரிகளின் டீசல் டேங்க்குகள் உடைந்து திடீரென தீப்பற்றிக் கொண்டன. சிறிது நேரத்தில் 2 லாரிகளும் எரிந்து நாசமாகின. லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகள் கருகி சேதமடைந்தன.  தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் கருகிய லாரி மற்றும் சிமெண்ட் மூட்டைகளின் மதிப்பு ரூ.31 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த டாரஸ் லாரி ஓட்டுநர் சீனிவாசன் (45), உதவியாளர் ரமேஷ் (32) ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குன்னம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.