இந்திய நாட்டின் இருதய நாடி
இளைஞர்கள் இங்கே பலப்பல கோடி
இலட்சிய நோக்குடன் திரண்டனர் சங்கத்தில்
இந்திய ஜனநாயக வாலிபர் பெயரில்
சங்கம் தோன்றிய நாளில் இன்று
எங்கும் முழங்குக சங்கநாதம் நன்று
தங்கும் வேற்றுமை களையும் தருணம்
பொங்கும் இளைஞர் ஒற்றுமை மலரும்
காதலும் வீரமும் கண்கள் இரண்டென
காத்த தமிழ் மண்ணில் பாழென
சாதல் ஆகலாமா சற்றே சிந்திப்பீர்
மோதல் வரினும் வியூகத்தில் சந்திப்பீர்
உடலில் ஓடும் குருதி ஆயினும்
உழைப்பில் உதிரும் வியர்வை ஆயினும்
உலகில் சாதி மதமும் பார்க்குமோ
குருதியும் வியர்வையும் வேறு படுமோ
நால்வருண சாதிகள் சொல்லிச் சொல்லி
கொடுமைகள் தொடரும் பின்னிப் பின்னி
நாற்றிசையும் நல்லெண்ண இளைஞர் யாவரும்
நோக்குந் திசையெலாம் நீக்கமறக் கூடுவீர்
சாதியால் மதத்தால் பிரிக்கா வண்ணம்
ஒன்றாவீர் இளைஞர்கள் ஒரே எண்ணம்
காதலால் கௌரவம் அகன்றதாய்க் கொல்வர்
ஆணவக் கொலைக்கு முடிவுரை எழுதுவீர்
புதைக்க எரிக்க பரம்பரை பரம்பரையாய்
கழிவகற்ற மலமள்ள வாழையடி வாழையாய்
சிதைத்தலைச் சிதைத்திட சினத்துடன் எழுகவே
சமஉரிமைச் சமூகம் சமைத்திட வருகவே
அனைவர்க்கும் கல்வி வேலை உரிமையை
அவசியம் கிடைக்க இடையறா தியங்குக
அனைவரின் வாழ்வை மறிக்கும் வழியுடன்
அயராது இயங்கும் அரசெதிர்க்க விழிப்புடன்
நாட்டின் பூரண விடுதலை பெற்றிட
ஏட்டில் அல்லாது செயலில் கற்றிட
பூட்டிய காளைகள் பயணம் வழியில்
ஈட்டும் வெற்றி மார்க்சிய ஒளியில்
பெரணமல்லூர் சேகரன்
இன்று (நவம்பர் 3) இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பு தினம்