புதுதில்லி:
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் பத்திரிகையான சார்லி ஹெப்டோவில் வெளிவந்த முகமது நபியின் கேலிச்சித்திரத்தை மாணவர்களிடம் காட்டி சாமுவேல் பேட்டி (47) என்னும் பள்ளி ஆசிரியர் பாடம்நடத்தினார்.
இதற்காக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் 18 வயது இளைஞரால், சாமுவேல் பேட்டி, கடந்த அக்டோபர் 16 அன்று பள்ளிஅருகிலேயே தலை துண்டித்து கொல்லப் பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இந்த படுகொலைக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிடுவதோடு நிறுத்தாமல், மதத்தைத் தொடர்புப்படுத்தி, ‘இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்’ என்று மேக்ரான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி என்ற பெயரில், கடந்தஅக்டோபர் 29 அன்று பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் அங்கு தனது கண்ணில் பட்டவர் களை எல்லாம் கொடூரமாகத் தாக்கினார். இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிர் இழந்தனர். காவல்துறையினர் அவரைக் கைது செய்த போது, ‘அல்லாஹூ அக்பர்’ எனக் கோஷமிட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இஸ்லாமிய மதத்தின் பெயரால், மத அடிப்படைவாதிகள் நடத்தும்இதுபோன்ற சம்பவங்களுக்கு முஸ்லிம் கள் உட்பட உலகம் முழுவதும் அனைத்துத்தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், புகழ்பெற்ற பல்வேறு துறை ஆளுமைகளும், 130 பேர் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், “கொடூரமான குற்றங்களை, எந்தவொரு மதத்தின் பெயராலும், நியாயப்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கிறோம். சக மனிதர்களைக் கொல்வதையும் அல்லது அச்சுறுத்துவதையும் நியாயப் படுத்த எந்த கடவுள், தெய்வங்கள், தீர்க்கதரிசிகள் அல்லது புனிதர்களின் பெயர் கள் பயன்படுத்தப்படுவதையும் ஏற்க முடியாது” என்று கூறியுள்ளனர்.
“மற்றவர்கள் செய்த குற்றங்களுடன் தனது குற்றங்களை ஒப்பிடுவது பகுத்தறிவற்ற மற்றும் அபத்தமான வாதமாகும். ஒரு தவறுக்கு, இன்னொரு தவறு பரிகாரம்ஆகாது. அவற்றை இரண்டு தவறுகள் என்றுதான் சொல்ல முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.எழுத்தாளர் துஷார் காந்தி, டேனிஷ்ஜாவேத், நாடக ஆளுமை மல்லிகா சாராபாய், சமூக ஆர்வலர் மேதா பட்கர், பேராசிரியர் மிருதுளா முகர்ஜி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், திரைக் கலைஞர்கள் நசிரூதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, ஸ்வாரா பாஸ்கர், ஜீஷன் அய்யூப், இயக்குநர்கள் பெரோஸ் அப்பாஸ் கான், இயக்குநர் கபீர் கான், தொழிலதிபர் அப்துல், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் உள்ளிட்டோர் கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டு உள்ளனர்.