அம்ரிதா பிரீதம் பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் எழுதிய பஞ்சாபிக் கவிஞரும், எழுத்தாளரும், புதின ஆசிரியரும் ஆவார். இவர் 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் நாள் பிறந்தவர்.
இவர் எழுதிய கவிதை நூல்கள், கதைகள், புதினங்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மேல் இருக்கும். இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருதுகளான ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது உட்பட்ட பல விருதுகளைப் பெற்றவர். தொடக்கக் காலத்தில் காதலும் கற்பனையும் நிறைந்த கவிதைகளைப் படைத்தார். ஒன்றுபட்ட இந்தியா உடைந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று பிரிந்த போது நிகழ்ந்த வன்முறைகளும் கலவரங்களும், இலட்சக் கணக்கில் மக்கள் கொலையான நிகழ்வுகளும் அம்ரிதாவின் எழுத்துப் போக்கை மாற்றின. மதச்சண்டையால் ஏற்பட்ட அவலங்களைத் தம் படைப்புகளில் பதிவு செய்தார்.அம்ரிதா பிரீதம் அறுபது ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பஞ்சாபி இலக்கியத்தில் சிறந்த ஆளுமையுடன் வலம் வந்தார். அம்ரிதாவின் இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பான் மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன.இவர் பெற்ற விருதுகள்:
பஞ்சாப் ரத்தன் விருது, சாகித்திய அகாதமி விருது (1956), ஞானபீட விருது (1982), பத்மஸ்ரீ விருது (1969), பத்ம விபூசண் விருது (2004), தில்லிப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் (1973), ஜபல்பூர் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் (1973), விஸ்வ பாரதி முனைவர் பட்டம் (1987), பல்கேரிய நாட்டு விருது (1979), பிரெஞ்சு அரசு விருது.1986 முதல் 1992 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் குல்சார், அம்ரிதாவின் கவிதைகளுக்கு இசை அமைத்து ஒலி நாடா ஆல்பத்தை 2007ஆம் ஆண்டில் வெளியிட்டார்.இவர் 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள் மறைந்தார்.