tamilnadu

நூறுநாள் வேலைத் திட்ட நாட்கள் அதிகரிக்கப்படுமா? சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
நூறுநாள்  வேலைத் திட்ட  நாட்களை அதிகரிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு. வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  பதிலளிக்கை யில், இத் திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களைஅதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் கூறுகையில், நாடு முழுமையும் சராசரி வேலை நாட்கள் ஏப்ரலில் 12 நாட்கள், மே 17, ஜூன் 6, ஜூலை 14, ஆகஸ்ட் 12 நாட்கள் என்ற அளவில் இருந்துள்ளன. இந்த சராசரி தமிழகத்தில் ஏப்ரலில் 4, மே 7, ஜூன் 9, ஜூலை 10, ஆகஸ்ட் 8 என்ற அளவில் இருந்துள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தகுதி வேலை நாட்களை 100 நாட்களுக்கு  மேலும் அதிகரிப்பதற்கான முன்மொழிவு ஏதும் அரசின் தரப்பில் இல்லை என்று தெரிவித்தார்.

கிராமப்புற மக்களுக்கு  அநீதி 
இதுகுறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி., நாடு முழுக்க வேலையிழப்புகள் கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ள நிலையிலும், புலம் பெயர் தொழிலாளர் பலர் சொந்த கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ள நிலையிலும் ஊரக வேலைத் திட்ட நாட்களை அதிகரிக்கிற எண்ணம் இல்லை என்ற அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. 200 நாட்களாக தகுதி வேலை நாட்களைஉயர்த்த வேண்டுமென்று விவசாய அமைப்பு களும், இடதுசாரிக் கட்சிகளும் எழுப்பி வருகிற கோரிக்கையை அரசு பரிசீலிக்க மறுப்பது கிராமப்புற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். தமிழக சராசரி, தேசிய சராசரியை விடக் குறைவாக, கடந்த ஐந்து மாதங்களில், 4 மாதங்களில் இருந்திருக்கிறது என்பது அமைச்சர் பதிலில் வெளிப்பட்டுள்ளது.  தமிழக அரசு இது குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

;