tamilnadu

img

அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்- துஷ்யந்த் தவே கேள்வி

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர்  துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பு உள்ளார். 
ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மும்பை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடைமுறைக்கு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து , உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவரான துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்ற நிர்வாக தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கோவிட் தொற்றுநோய்களின் போது கடந்த எட்டு மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள், வாரக் கணக்கில், மாதக் கணக்கில் பட்டியலிடப்படாத நிலையில், ஒவ்வொரு முறையும் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனு மட்டும் எப்படி உடனடியாக பட்டியலிடப்படுகிறது. இதுபோன்ற அசாதாரணமான அவசர விஷயங்களின் பட்டியல்கள் தலைமை நீதிபதியின் குறிப்பிட்ட உத்தரவுகள் இல்லாமல் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இந்திய தலைமை நீதிபதியிடம் இருந்தோ, நிர்வாகத் தலைவராகிய நீங்களோ அல்லது பதிவாளரிடம் இருந்தோ அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? சில வழக்குகளை அவசரமாக பட்டியலிட நீங்கள் எனக்கு உதவி புரிந்துள்ளீர்கள். ஆனால், விஷயம் அதுவல்ல. வழக்கு பட்டியல் தொடர்பான விஷயங்கள் கணினிமயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் போது இதுபோன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் எப்படி நடைபெறுகிறது.
சாமானிய குடிமகன்கள் பலர் சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் நிலையில், அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு சலுகை என கேள்வி எழுப்பியுள்ள துஷ்யந்த் தவே, முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு கூட அவசரமாக பட்டியலிடப்படாமல் தாமதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்சி உள்ளார். அதேசமயம் நேற்று தாக்கல் செய்த அர்னாப் கோஸ்வாமியின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தனது கடிதத்தை வழக்கு விசாரணையின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.