புதுதில்லி, ஏப்.17-“தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிவருகிறது. அதே நேரத்தில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஒருகுடும்பத்துக்காகப் பணியாற்றுகின்றன. இது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது” என்று பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில், வாரிசு வேட்பாளர் களைப் பற்றி பேசுவதற்கு பாஜக-விற்கு தகுதியில்லை என்றும், மகாராஷ்டிர மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் 40 சதவிகிதம் பேர் வாரிசு அரசியல்வாதிகள்தான் என் றும் விமர்சனம் எழுந்துள்ளது.“தற்போது இந்தியாவிலுள்ள எந்தக் கட்சியும் வாரிசு அரசியலுக்கு விதிவிலக்கல்ல; அதிலும் குறிப்பாக பாஜக கட்சி. மகாராஷ்டிர மாநிலத்தில் பூனம் மகாஜன், பிரீத்தி முண்டே, சுஜய் விகே பாட்டீல் உள்ளிட்டவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் என்பதை பிரதமருக்கு நினைவு படுத்துகிறேன்” என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா பூலே கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் 54 சதவிகிதம் வேட்பாளர்கள் அரசியல் வாரிசுகளாக இருந்தனர். 2019 தேர்தலில், இது 77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 37 வேட்பாளர்கள் அரசியல் வாரிசுகளாக உள்ளனர்.கட்சிகளைப் பொறுத்தவரை, தேசியவாத காங்கிரஸ் 62 சதவிகித வாரிசுகளுக்கும், பாஜக 40 சதவிகிதவாரிசுகளுக்கும் எம்.பி. சீட் வழங்கியுள்ளது.