புதுதில்லி:
ஹத்ராஸ் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், உ.பி. மாநில பாஜக அரசின் நடவடிக்கைக்கு அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருந்தே கண்டனங்கள் எழுந்தன.
பாஜக-வின் மூத்தத் தலைவரான உமாபாரதி, ஹத்ராஸ் பாஜக எம்.பி. ராஜ்வீர் தைலர், மோகன்லால் கஞ்ச் தொகுதி பாஜக எம்.பி.யான கவுஷல் கிஷோர், கவுஷாம்பியைச் சேர்ந்த பாஜக எம்.பி. வினோத் சொங்கார் ஆகியோர் உ.பி. பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.இந்நிலையில், மற்றொரு பாஜக எம்.பி.யான கிரிட் சோலங்கியும், “ஹத்ராஸ் தலித் பெண்ணின் உடல் நள்ளிரவே தகனம் செய்யப்பட்டது சரியல்ல” என்றும், “மாநில அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.பாஜக-வைச் சேர்ந்த சாமியாரிணியான சாத்வி நிரஞ்சன் ஜோதியும், “ஹத்ராஸ் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை, இறுதிச்சடங்கு செய்ய அவரது குடும்பத்திற்கு வழங்கியிருக்க வேண்டும், இதில் காவல்துறையினரின் நடவடிக்கை கேள்விக்குறியாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“பிரியங்கா காந்தியின் ஆடையை தொட்டு அவரை தடுத்து நிறுத்தியதற்காக போலீசார் மீது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மஹாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா கிஷோர் வாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், “ஒரு பெண்தலைவரின் ஆடையை ஆண் போலீஸ் எப்படி தொடலாம்..?” என்றும் “இது யார் கொடுத்த துணிச்சல்..?” எனவும் கேட்டுள்ள சித்ரா கிஷோர்வாக், “இது அரசியல் அல்ல..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.