புதுதில்லி:
டிஜிட்டல்/ஆன்லைன் ஊடகங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஓர் அறிவிக்கையின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசாங்கம், ஓர் அறிவிக்கை மூலமாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வரம்புக்குள், அனைத்து டிஜிட்டல்/ஆன்லைன் ஊடக மேடைகள் மற்றும் ஆன்லைன் மூலம் தகவல்களை அளித்துவரும் சாதனங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்திருக்கிறது. இவை இதற்கு முன்பு மத்திய தகவல் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழும், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்களின் கீழும் இருந்து வந்தன.
இந்த அறிவிக்கையின் மூலமாக, மத்திய அரசாங்கம் இப்போது டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் சாராம்சங்களையும் முறைப்படுத்துவது என்ற பெயரில் கட்டுப்படுத்த முனைந்திருப்பது தெளிவாகிறது. மத்திய அரசாங்கம் ஏற்கனவே அச்சு ஊடகங்களையும், எலக்ட்ரானிக்/தொலைக்காட்சி ஊடகங்களையும் கணிசமான அளவிற்குத் தன்வலைக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், இப்போது டிஜிட்டல் ஊடகத்தையும் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசுத் துறையால் டிஜிட்டல் ஊடகம் கட்டுப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே அமலில் உள்ள சட்டங்களும், தகவல் தொழில்நுட்ப சட்டமும் ஓர் ஆரோக்கியமான டிஜிட்டல் மீடியாவிற்கு போதுமானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)