உத்திரபிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற டிரக் கவிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால்,நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். தற்போது நெடுஞ்சாலைகள் தொழிலாளர்கள் நடந்து வருகின்றனர். மேலும் சிலர் டிரக்குகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டனர். இதையடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிறப்பு ரயில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி - மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில், டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், டெல்லியில் இருந்து கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான மூன்று பேரும் பெண் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.