tamilnadu

இன்று தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

ஆகஸ்ட் 20ஆம் தேதியை,  சென்ற வருடம் முதல், தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக மக்கள் அறிவியல் இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. கடந்த ஆண்டு “ஏன் என்று கேள்?” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட போது, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள அறிஞர்கள், விஞ்ஞானிகள், மக்கள் அறிவியல் செயல்பாட்டாளர்கள் எனப் பலர் இந்த தினத்தை அனுசரிக்க பெருமளவில் முன் வந்தனர். இதன் மூலம் அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் ஒரு ஆதரவுமிக்க  அடித்தளம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே இந்த வருடமும் நாடு முழுவதும் இந்நாளை தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாக மக்கள் அறிவியல் இயக்கங்கள் அனுசரிக்க உள்ளன.     2013ஆம் ஆண்டு, இதே நாளில், டாக்டர் நரேந்திர தபோல்கர், அதிகாலை நடைப் பயிற்சியின் போது, புனே நகரில், வலதுசாரி இந்துமதத் தீவிரவாதிகளால் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நினைவு கூரும் வகையிலும்  இந்நாள் நாடு முழுவதும் அறிவியல் இயக்கங்களால் தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்கப்படு கிறது. இதனை அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பும், அவரால் நிறுவப்பட்ட மஹராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கமும் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மஹராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கத்தை நிறுவி  அதன் மூலம் தபோல்கர் நடத்திய  இடைவிடாத இயக்கங்களும் செயல்பாடுகளும் அவரின் கொலைக்கான காரணமாய் அமைந்தன.  அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் நடந்த பிற அறிஞர்களின் கொலையும் நம்மை கதி கலங்க வைத்தன. இந்தக் கொலைகள் அனைத்தும் அதே குழுவினரால் நடத்தப்பட்டுள்ளது என இப்பொழுது தெரிய வந்துள்ளது.  குறிப்பாக கோவிந்த் பன்சாரே கலப்புத் திருமணத்திற்கு ஆதரவாகவும், சிவாஜியின் உண்மையான வரலாற்றையும், காந்தியின் படுகொலையைக் கொண்டாடும் கொடூரக் கும்பல்களுக்கு எதிராகவும் துணிச்சலுடன் பிரச்சாரம் செய்தவர். இதற்காக அவர் 2015ல் கொலை செய்யப்பட்டார். அதே போல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எம்.கல்புர்கி என்பவர் 12ஆம் நூற்றாண்டில் அம்மாநிலத்தில் பிரபலமான சமூக சமய மறுமலர்ச்சி  குறித்த ஆய்வுகளையும் கருத்துக்களையும் பிரபலப்படுத்தியதன் விளைவாக 2016ஆம் ஆண்டு இதே குழுக்களால் வீட்டிற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டர். இதே போல் அதே மாநிலத்தைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் என்ற பத்திரிகையாளர் இந்து மதவாதத்திற்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட காரணத்தினால் 2017ஆம் வருடம் வீட்டு வாசல் முன்னரே சுட்டுக் கொல்லப்பட்டர். அறிவியல் மனப்பான்மை என்பது நமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக எழுந்த கண்ணோட்டம் ஆகும். அடிமை இந்தியா விடுதலை பெற்றால் தான் நாம் முன்னேற முடியும் என்ற அறிவியல் மனபான்மையால் விளைந்ததாகும். இந்த விடுதலைப் போராட்டத்தால் உருவான இந்தியா பல்வேறு மாநிலங்களைக்  கொண்ட நாடு என்பதும் அவை ஒவ்வொன்றும் சுதந்திரமாக  முன்னேறுவதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகளை அனுமதிப்பது தான் அறிவியல் முறையாகும். ஆனால் தற்போது அது முற்றிலும் நிராகரிக்கப்பட்டு மக்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள வரைவு தேசிய கல்விக் கொள்கை என்பது அறிவியல் மனப்பான்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. இந்த அறிக்கையில் கல்வியை மத்தியப்படுத்துதல், ஒரே மாதிரியான செயல் வடிவங்களை கல்வியில் அமல்படுத்துதல், இந்தி-இந்து-இந்துஸ்தான் என்ற கோட்பாட்டினை மறைமுகமாக வைத்திருத்தல், கல்வியை உலக சந்தையில் இணைத்து வசதி உள்ளவர்களுக்கு என வஞ்சகம் செய்திருத்தல் ஆகியனவற்றையும் விளக்கி இந்நாளில் மக்களிடம் எடுத்த்ச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தற்போது நிலவி வரும்  மூட நம்பிக்கைகளை நாம் ஒழித்தாக வேண்டும். அத்ன் ஒரு நிகழ்வாக நமது நாட்டில் டிசம்பர் 26, 2019 அன்று தென்மாநிலங்களிலும், ஜூன் 21, 2020ல் வட மாநிலங்களிலும் தெரியவிருக்கும் கங்கண சூரிய கிரகண நிகழ்வைப் பயன்படுத்தி, காலங்காலமாக ஒட்டிக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழித்திட கங்கண சூரிய கிரகணத்தைக் காண பெருமளவில் மக்களைத் திரட்டுவதும் அந்நேரத்தில் ”உணவு உண்ணும் திருவிழா” உள்ளிட்ட பல்வேறு மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்த தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தன்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு அதன் அமைப்புகளை முடுக்கி விடுகிறது.  “ஏன் எனக் கேள்” என்ற இந்தப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி,  தற்போதைய  இந்த அபாய நிலை ஏன் என அறிந்து கொண்டு, சில வருடங்களில் இதை மக்கள் மாற்றி அமைக்க முன் வருவதற்கான நம்பிக்கையை இந் நாளில் உருவாக்குவோம்.

பேரா. பொ. இராஜமாணிக்கம்,
பொதுச் செயலர், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு