tamilnadu

img

பொருளாதாரத்தை ஊக்குவித்திட 10 லட்சம் கோடி ரூபாய் தேவை...

புதுதில்லி:
நாட்டின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட வேண்டுமானால், நாட்டிலுள்ள 80 சதவீதக் குடும்பங்களுக்கு ரொக்க மாற்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அனைவருக்குமான உணவு ரேஷன் அளித்திட வேண்டும் என்றும் இதற்கு பத்து லட்சம் கோடி ரூபாய் புதிய ஊக்குவிப்புத்தொகை தேவை என்றும் பொருளாதார நிபுணரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பொருளாதாரப் பேராசிரியருமான ஜெயதி கோஷ் கூறினார்.

புதுதில்லியில் ஹெடரோடாக்ஸ் எகனாமிஸ்ட்ஸ் கலெக்டிவ் அமைப்பின் சார்பில் இணையவழி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேரா. ஜெயதிகோஷ் பேசியதாவது:
வேலைவாய்ப்பு உத்தரவாதம் ஊரக மற்றும் நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கும் விரிவாக்கப்படவேண்டும். ஏனெனில் இப்போதுவேலையின்மை நகரங்களிலும் அதிகரித்திருக் கிறது. இதற்கு அரசாங்கம் நிதி நெருக்கடி குறியீடுகளை நிறுத்தி வைத்துவிட்டு, இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்திட வேண்டும். நாட்டில் பொருளாதாரம் வற்றிக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் மிகவும் ‘அற்புதமான’ கடன் விகிதங்களால் எவ்விதப் பயனும் ஏற்படாது. அரசாங்கம் அறிவித்துள்ள கொள்கைகள், தோல்வியையே ஏற்படுத்திடும்.  

அரசாங்கம் அறிவித்துள்ள 20 லட்சம்கோடி ரூபாய் நிதித்தொகுப்பில், வெறும்3 லட்சம் கோடி ரூபாய்தான் உண்மையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத்தொகை கூட ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காகத்தான்  ஒதுக்கப்பட்டிருக் கிறது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவு களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதில் மிகவும் பெரிய அளவில் உள்ள தொழில் அதிபர்களுக்குத்தான் பயனளித்திடும்.விவசாய விளைபொருள்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை, நாட்டில் உள்ள பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவிக்கப்பட வில்லை. உண்மை ஊதியங்கள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியைத் தணித்திட வேண்டுமெனில், தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் அடுத்து ஆறுமாத காலத்திற்கு அனைவருக்குமான பொது விநியோக முறை மூலமாக அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு ஜெயதி கோஷ் கூறினார்.

கூட்டத்தில் பங்கேற்ற இதர பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது:   
கடந்த 75 நாட்களாக இருந்துவரும் சமூக ஊரடங்கின் காரணமாக, வருமானங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு அளித்திடும் விதத்தில் நாட்டின் அடிமட்டத்தில் உள்ள 80 சதவீத குடும்பத்தினருக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் நகர்ப்புறங் களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும். தற்போது கிராமங்களில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் விவசாயப் பணிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இதன் வேலைநாட்களை 200ஆக உயர்த்திட வேண்டும்.நிதித்தொகுப்புக்கான நிதியை உருவாக்கிட, பொது மக்கள் வாங்கக்கூடிய விதத்தில் சிறப்புப் பத்திரங்களை வெளியிடலாம்.இவ்வாறு பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.       (ந.நி.) 

;