tamilnadu

14 முக்கிய சட்டங்களைத் தகர்த்து இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் இது..... மக்களவையில் சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

சர்வதேச நிதி சேவை மைய மசோதா 2019 பின்னணியில் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு உலக சந்தையை விரிவுபடுத்தவும், இந்திய முதலாளிகளை பன்னாட்டு முதலாளிகளாக மாற்றுவதற்கான பாதையை விரிவுபடுத்தவும் பின்னணி கொண்ட ஒரு மசோதா.நீண்ட காலமாகவே சர்வதேச நிதி மூலதனத்தினுடைய நிர்ப்பந்தம் இத்தகையதொரு மையத்தை உருவாக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருவதை நாம் அறிவோம், இன்றைக்கு இந்த மசோதா முன்மொழியப்பட்டிருக்கிறது.
இந்த மசோதாவில் ஏறக்குறைய 14 சட்டங்கள்; அதாவது ரிசர்வ் வங்கி சட்டம், இன்சூரன்ஸ் சட்டம், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 14 சட்டங்களுக்கான திருத்தங்கள் இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஆணையம் நிறுவப்படுவதில், மிக முக்கியமாக பிரிவு 25 ஐ மிக ஆபத்தான ஒரு பிரிவாக நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்கள் எதுவும் இவற்றை விசாரிக்கவோ அல்லது இதன் மீதான கேள்விகளை எழுப்பவோ முடியாத அளவுக்கு ஒரு உச்ச அதிகார அமைப்பாக இந்த ஆணையத்தை நீங்கள் நிறுவுகிறீர்கள். 

உண்மையில் 1999-ல் ஏற்பட்ட தெற்காசிய நிதி நெருக்கடி, 2008 ல் ஏற்பட்ட உலக மூலதன நிதி நெருக்கடி - இந்த இரண்டு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளிலும் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவுக்கு பாதிக்கப்படாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, இங்கே இருந்த வலிமையான பொதுத்துறை நிறுவனங்கள். இன்னொன்று, நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகின்ற, பாதுகாக்கின்ற சட்டங்கள். இந்த இரண்டும் தான் மிக முக்கியமானவை.ஆனால் இந்த சட்டங்களை எல்லாம் தகர்ப்பது, அல்லது இதற்கெல்லாம் விதிவிலக்கான அமைப்புக்களை உருவாக்குவது உலக அளவிலேயே பெரும் ஆபத்தானது என்ற கருத்துக் கணிப்புகள் வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.இன்றைக்கு ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனுபவம் பெற்ற நிதி நிறுவனங்களுடைய ஆலோசனைகள் பல மட்டங்களிலும் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது என்பதை தேர்தல் பத்திரங்கள் உள்ளிட்ட விஷயங்களிலே நாம் பார்க்கிறோம்.

இன்றைக்கு இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருக்கிற ஒரு சூழலில் இதுபோன்ற ஒரு ஆணையத்தை உருவாக்க இன்னும் ஆழமான பரிசீலனை தேவை. எனவேஇந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் பேசியதிலிருந்து...