tamilnadu

img

தொழிலாளர்கள் மீதான யுத்தம் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான யுத்தம், விரைவானமுறையில் இந்தியாவில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான யுத்தமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில், இந்த ஆண்டு மார்ச்சில், நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் சுமார் 10 கோடி பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பதாக அரசாங்கத்தால் கூறப்பட்டது. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களில் பெரும்பகுதியினர், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள். இதனைத்தொடர்ந்து தாங்கள் தங்கியிருந்த இடங்களையும் இழந்து, உணவு மற்றும் தங்குமிடம் இன்றி வீதிக்கு விரட்டப்பட்டார்கள். இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்ற அனைவருமே உண்மையில் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களே. அவர்கள் கட்டுமானத் தொழில்களிலும், நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளிலும் மற்றும் சந்தைகளிலும், விநியோக வலைத்தளங்களிலும் (distribution networks) தொழிலாளர்களாக வேலை செய்தவர்களேயாவார்கள். 

நவீன தாராளமய முதலாளித்துவம் மிகவும் திட்டமிட்டுத் தொழிலாளர்களின் நிலைமைகளை வடிவமைத்திருக்கிறது. கிராமப்புறங்களிலிருந்தோ அல்லது அண்டை மாநிலங்களிலிருந்தோ நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களை, தொழிற்சாலைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் நீண்ட நேரத்திற்கு வேலை வாங்கிய போதிலும், அவர்களை இன்றளவும் “புலம்பெயர் தொழிலாளர்கள்” என்றே அழைப்பதுடன், அவர்களுக்கு எவ்விதமான பணிப்பாதுகாப்பையும் அளித்திடவில்லை. ஆம், அவர்களுக்கு நிரந்தர வேலை கிடையாது, போதிய வருமானம் கிடையாது, சமூகப் பாதுகாப்பு கிடையாது, அவர்கள் சொந்தமாக தங்குவதற்கான வசிப்பிட வசதியும் கிடையாது.

சுதந்திரம் பெற்ற பின்னர் உருவான முதல் தலைமுறை தொழிலாளர் வர்க்கம், தாங்கள் பணிசெய்யும் இடங்களுக்கு அருகிலேயே குடியேறினார்கள். பின்னர் உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை அப்படி இல்லை. இவர்களில் பலர், (கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர்), நாட்கூலித் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் களாவார்கள். அவர்கள் தாங்கள் பணிசெய்யும் இடங்களில் தங்கள் வேர்களை ஊன்ற அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு இவர்களின் நிலைமைகள், பிரடெரிக் ஏங்கெல்ஸ் விவரித்ததைப் போன்று, “முதலாளித்தவ சுரண்டலின் இளம் நிலை” (“juvenile state of capitalist exploitation”)  என்று வர்ணித்திட முடியும். இதன்கீழ் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுரண்டலின் மிகவும் ஆரம்பகால வடிவங்களில் அவதிக்கு உள்ளானார்கள். இவற்றைத் தோழர் ஏங்கெல்ஸ், 1845இல் எழுதிய தன்னுடைய “இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலைமைகள்” (“The Conditions of the Working Class in England”) என்னும் நூலில் தெளிவான முறையில் சித்தரித்திருக்கிறார். 

இத்தகைய சுரண்டலின் ஆரம்ப கால வடிவங்களில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், உற்பத்தியிலும், உலக அளவிலான விநியோகக் கண்ணிகளை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி சுரண்டலின் தீவிரத்தன்மை புதிய வடிவங்களில் அமைந்துள்ளன.

கொரானா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகள் தொழிலாளர் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும்தான் நேரடியாகத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கி இருக்கின்றன.  கொரானா வைரஸ் தொற்று, “புலம்பெயர் தொழிலாளர் நெருக்கடி”யின் மூலமாக. உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான நிலைமைகளை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. இதனை நாட்டிலுள்ள பிரதான ஊடகங்கள் மூடி மறைக்கும் வேலையிலேயே இறங்கி இருக்கின்றன.  

இவ்வாறு உழைக்கும் வர்க்கத்தில் மிகப்பெரிய அளவில் காணப்படும் புலம்பெயர் தொழிலாளர்களை, மோடி அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது என்பதை கொரானா வைரஸ் தொற்று மிகவும் பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக்காட்டிவிட்டது. எவ்விதமான அறிவிப்பும் கொடுக்காமல், சமூக முடக்கத்தை அறிவித்ததன் மூலம், உழைக்கும் வர்க்கத்தின் மிகவும் மோசமாக உள்ள பிரிவினர் மீது பேரழிவினை ஏற்படுத்தியபின், வேலையின்றி, உணவின்றி, தங்க இடமின்றித் தவித்திடும் தாங்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையைக்கூட மோடி அரசாங்கம் சட்டை செய்யாமல் இருப்பது நீடிக்கிறது. தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்வதற்கு முயற்சித்தவர்கள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள், மாநிலங்களுக்கிடையேயான எல்லைப்பகுதிகளில் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள், பலர் சுற்றி வளைத்து தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் நாற்பது நாட்கள் கடந்த பின்னர், மாநில அரசாங்கங்களின் இடைவிடாத கோரிக்கைகளின் காரணமாக, அவர்களை ஏற்றிச் செல்வதற்குப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டன. மாநில அரசாங்கங்கள், இவ்வாறு பேருந்துகளை இயக்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும், அதிக செலவு பிடிக்கும் என்றும் கூறியபின்னர், இறுதியாக, தொழிலாளர் சிறப்பு ரயில்கள் (Shramik Special Trains) என்ற பெயரில் ரயில்கள் மே 1 அன்று அறிவிக்கப்பட்டன. ஆனால் இதிலும்கூட, ரயில்வே நிர்வாகம், அவ்வாறு பயணம் செய்யும் தொழிலாளர்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்திட வேண்டும் என்று மனிதாபிமானமற்ற முறையில் கேட்கச் செய்திருப்பதன் மூலம் அரசாங்கம் தன்னுடைய கோர முகத்தைக் காட்டியிருக்கிறது.

நிர்க்கதியாக இருந்திடும் தொழிலாளர்களைக் கொள்ளையடித்திடும் இத்தகு இழிவான முயற்சிகளுக்கு எதிராக, எதிர்க்கட்சியினரும், ஊடகங்களில் சிலவும் குய்யோமுறையோ என்று கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அரசாங்கம் குழப்பத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர், திசைதிருப்பும் விதத்தில் விளக்கங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய அரசு இவ்வாறு ரயில்களை இயக்குவதில் 85 சதவீதத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், மாநில அரசுகள் 15 சதவீதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இதனை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராததால், மாநில அரசுகள்தான் இவ்வாறு ரயில்கள் விட வேண்டும் என்று கோரியதாக, மத்திய அரசு, பொறுப்பினை மாநில அரசுகள் பக்கம் தள்ளிவிடப் பார்க்கிறது. ஆனால், ரயில்வேயின் சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு பயணியிடமிருந்தும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக் கட்டணத்துடன் கூடுதலாக 50 ரூபாய் சர்சார்ஜ் வசூலித்திட வேண்டும் என்கிற உண்மை நீடிக்கிறது.

இதற்குக் கூட  செலவளித்து, சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நிலையில் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் இல்லை. உதாரணமாக, மும்பையில், தொழிலாளர்களிடம் தாங்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு ஏற்றவிதத்தில் தங்கள் உடல்நிலை இருப்பதாக, மருத்தவரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டுமென்று வலியுறுத்தப்படுவதாகவும், இவ்வாறு சான்றிதழ் வழங்குவதற்கு, தனியார் மருத்தவமனைகள்/மருத்துவர்கள் ஆயிரம் ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை கேட்பதாகவும் தொழிலாளர்கள் புகார் செய்திருக்கிறார்கள். இவ்வாறு இவர்களால் முடியாத விதங்களில் ஏராளமான பிரச்சனைகள். எனவே, புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக மீண்டும் தங்கள் ஊர்களை நோக்கி நடந்து செல்லத் தொடங்கி இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மோடி அரசாங்கம், இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் அனுப்புவது தொடர்பாக மீண்டும் வேறுவிதமான சிந்தனைக்கு வந்திருப்பதுபோல் தெரிகிறது. மே 3 அன்று, மத்திய உள்துறை செயலாளர், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மிகவும் குழப்பமான வழிகாட்டுதல் ஒன்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த சிறப்பு ரயில்கள், சமூக முடக்கத்திற்கு முன்பு  தங்கள் சொந்த இடங்களிலிருந்து பணிசெய்யும் இடத்திற்குச் சென்றுவிட்டு, நிர்க்கதியாய் விடப்பட்டு  திரும்ப முடியாது இருந்த தொழிலாளர்களுக்கானது என்று கூறியிருக்கிறது. இதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் இந்த ரயில்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

மோடி அரசாங்கம், சமூக முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டபின்னர், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து மிகவும் கவலைப்படுவது போன்று தோன்றுகிறது.   கட்டிடங்கள் கட்டும் உரிமையாளர்களின் கட்டளைக்கிணங்க, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தொழிலாளர்களிடம் மாநிலத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது, இந்தத் தொனியைப் பிரதிபலிக்கிறது. பீகாருக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காகக் கோரப்பட்ட ரயில்களை கர்நாடக அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது. மிகவும் அற்ப ஊதியத்தில் தொழிலாளர்களைக்கட்டிப் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்து வதைத் தவிர இது வேறொன்றுமில்லை.

2019ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டமுன்வடிவு (Occupational Safety, Health and Working Conditions Code Bill, 2019)  நிறைவேற்றப்பட்டபின்னர், 1979ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்தல்) சட்டம் (Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979) ரத்து செய்யப்பட இருக்கிறது. மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டம், (உண்மையில் பல மாநிலங்களில் இச்சட்டம் சீரியசாக அமல்படுத்தப்படவில்லை என்ற போதிலும்கூட,) புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏதோ கொஞ்சம் உரிமைகளையும், ஆதாயங்களையும் அளித்திருந்தது.  புலம்பெயர் தொழிலாளர்கள் இருத்தல் என்பதே நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கக்கூடிய சூழலில், இருக்கின்ற சட்டத்தை ரத்து செய்வது என்பது கிரிமினல்தனமானதாகும் என்று இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) சுட்டிக்காட்டி இருக்கிறது. இப்போது செய்யப்பட வேண்டியது என்னவெனில், இந்தச் சட்டத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றி, அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்துவதேயாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் விதம், பொதுவாக வரவிருக்கும் காலத்தில் தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான அறிகுறியாகும். ஏற்கனவே, நான்கு மாநில அரசுகள், தற்போது இருந்துவரும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் விதிகளையும், தொழிலாளர் விரோத, முதலாளிகள் ஆதரவு சட்டங்களாகவும் விதிகளாகவும் மாற்றிவிட்டன. இவற்றின்மூலம் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பணி நேரம் இப்போது இருந்துவரும் 8 மணி நேரம் என்பது, 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலை ராஜஸ்தான் அரசாங்கம் தொடங்கி வைத்திட, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாசலப் பிரதேச அரசாங்கங்கள் பின்தொடர்ந்திருக்கின்றன.  ஏப்ரல் 27 அன்று காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அசோக் கேலாத் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் பாராட்டி இருக்கிறார். இதர மாநிலங்கள் கொரானா வைரஸ் தொற்றை சமாளித்திட எடுக்கப்பட்ட முயற்சி குறித்துப் பாராட்டும் விதத்தில் ஒரு வார்த்தையைக் கூட அவர் உதிர்த்திடவில்லை.

நரேந்திர மோடி, ராஜஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கையைப் புகழ்ந்து பாராட்டியிருப்பதென்பது, இதர மாநிலங்களும் இதேபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்கான சமிக்ஞையாகும். மத்தியப் பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சௌஹான், தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஆய்வு செய்தல், பதிவேடுகளைப் பராமரித்தலில் விலக்களித்தல், ஷிப்ட் நேரத்தை தங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்தல் போன்று தொழிலாளர்  நலச் சட்டங்களில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு, தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அவர், புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் தொழிலாளர் நல நிதியத்திற்கு, ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டுக்கு 80 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தற்போது இருந்துவரும் நிலைக்கும் விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறாக முதலீடுகளைக் கவர்கிறோம் என்ற பெயரில் மேலும் மேலும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாளித்துவத்திற்கு ஏற்படும் ஒவ்வொரு நெருக்கடியும், தொழிலாளர் நலன்கள் காவு கொடுக்கப்படுவதன் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பது முதலாளித்துவத்தின் விதியாகும். ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE-Centre for Monitoring the Indian Economy) கூற்றின்படி, வேலையின்மை விகிதம், மார்ச் 15 முடியும் வாரத்தில் 6.74 சதவீதமாக இருந்தது,  மே 3 அன்று முடியும் வாரத்தில் 27.11 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வேலையில் நீடிக்கும் தொழிலாளர்களுக்கும் இனிவருங்காலங்களில் எவ்விதமான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடையாது என்பதுடன் மேலும் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் ஊதியங்கள் குறைக்கப்படும் என்றும் கசக்கிப்பிழியப்பட இருக்கிறார்கள்.  

மோடி அரசாங்கமும், ஆளும் வர்க்கமும் வரவிருக்கும் காலங்களில் அமல்படுத்தவிருக்கும் நடவடிக்கைகள் இவையாகும். தொழிற்சங்க இயக்கமும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நின்று இவற்றை எதிர்த்து முறியடித்திட வேண்டும்.

(மே 6, 2020)

(தமிழில்: ச. வீரமணி