தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும், கல்விக்கட்டணங்களையும், விடுதிக் கட்டணங்களையும் நாளும் உயர்த்தி மாணவர்களைக் கசக்கிப்பிழிவதைக் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஏ.எம். ஆரிப் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் செவ்வாய் அன்று, 2019ஆம் ஆண்டு தேசிய வடிவமைப்பு நிலைய திருத்தச் சட்டமுன்வடிவின் (National Institute of Design (Amendment) Bill, 2019) மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:
கடந்த அறுபது ஆண்டுகளில் நாடாளுமன்றம் 134 நிலையங்களை தேசிய முக்கியத்துவம் உடையவை என பிரகடனம் செய்திருக்கிறது. 1956இல் கரக்பூர், ஐஐடீ-யில் தொடங்கி, இப்போது மேலும் நான்கு நிலையங்களை இதில் இக்கூட்டத் தொடரின்போது இணைத்திட இருக்கிறோம். இதுபோன்று நிலையங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் என்று பிரகடனம் செய்வது மட்டும் போதாது. பல நிலையங்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அவை குறித்தும் நாம் ஆழமானமுறையில் சிந்தித்திட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களில் பிரதானமான பிரச்சனை மாணவர்கள் கிடையாது. மாறாக கல்வியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான். இந்நிலையங்களுக்கு மாணவர்கள் போட்டித் தேர்வு வைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்நிலையங்களின் ஆசிரியர் பணியிடங்கள் (faculty) ஏராளமாக காலியாக இருக்கின்றன. ஐஐடி-களில்கூட, 30 முதல் 40 சதவீத பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஐஐஎம்-களில் 20 முதல் 30 சதவீதம் காலியாக இருக்கின்றன. இவை அனைத்தும் தேசிய முக்கியத்துவம் உடையவைகளாகும். இப்பணியிடங்களை நிரப்பிட மாண்புமிகு அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து இந்நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்கள் நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் இங்கே பயிலும் மாணவர்கள் மிகவும் கொதித்துப்போயிருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இதில் தலையிட வேண்டும். தற்போது விடுதிக் கட்டணங்களை உயர்த்தியதை எதிர்த்துப் போராடி வரும் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்திற்குத் தீர்வினைக் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேசிய வடிவமைப்பு நிலையம் போன்ற நிறுவனங்கள் சமூக வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும் மிக முக்கியப் பங்களிப்பினைச் செய்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், இதுபோன்ற நிலையங்கள் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளில் வடிவமைப்பு வல்லமையை முன்னேற்றுவதற்கு உதவும் விதத்தில் அமைக்கப்பட்டன.
தேசிய வடிவமைப்பு நிலையங்கள் தாங்கள் வடிவமைப்புகளை மேம்படுத்திட வேண்டும். நம் பாரம்பர்ய கைவினைப் பொருள்களை மேம்படுத்தாவிட்டால் அதன்மூலம் நம் கைவினைஞர்களின் திறமையை வளர்த்தெடுக்காவிட்டால், இத்துறைகளில் வேலைவாய்ப்பை விரிவாக்க முடியாது, ஏற்றுமதியையும் அதிகரித்திட முடியாது. எனவே அந்தத் திசைவழியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஏ.எம்.ஆரிப் பேசினார்.