tamilnadu

img

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்....

புதுதில்லி:
ஆசிரியர் தகுதித் தேர்வு  (டெட்) சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அறிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்துவிதப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், 2 ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர்கள் ஆவர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது.  இந்நிலையில்  தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 50ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 29 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லும் வகையில் கால அவகாசம் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக என்சிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெட் தேர்வில் இனி தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ், ஆயுட்காலம் வரை செல்லும். எனினும் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றோருக்கு சட்ட ஆலோசனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விதி திருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.