tamilnadu

img

மத்திய அரசு, அரசமைப்புச்சட்டத்தை மதித்திடவில்லை-நடிகர் திக்மான்சு துலியா


மும்பை, மே 13-

இப்போதைய மத்திய அரசு, அரசமைப்புச்சட்டத்தைத் துளியும் மதித்திடவில்லை என்றும் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் என்பதே இருக்காது என்றும் மும்பை, திரைப்படக் கதாசிரியரும் நடிகருமான திக்மான்சு துலியா கூறியுள்ளார்.

நடிகர் திக்மான்சு துலியா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு மும்பை திரும்பியுள்ளார். அவரை, தி இந்து நாளிதழ் செய்தியாளர் பேட்டி கண்டபோது, திக்மான்சு துலியா, நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நகர்ப்புறங்களில் வாழும் மத்திய தர வர்க்கத்தினரின் வாக்குகளைக் காட்டிலும், கிராமங்களில் வசித்திடும் சிறிய மற்றும் ஏழை விவசாயிகளின் வாக்குகள் அதிகமாக இருந்திடும் என்றார். மேலும் இத்தேர்தலானது, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையேயான போராட்டம் என்றும் அவர் கூறினார்.

திக்மான்சு துலியா தன்னுடைய திரைக்கதைகளை அரசியலை மையப்படுத்தியே அமைத்திருப்பார். என்னைச் சுற்றி நடப்பவற்றின் மீது எனக்கிருக்கும் ஆர்வம் தான் இத்தகைய படங்களை உருவாக்க என்னைத் தூண்டுகின்றன என்று அவர் அடிக்கடி கூறுவதைக் கேட்கமுடியும்.

இதற்கு அவர் அரசியல் இயக்கங்கள் அதிகமாக உள்ள அலகாபாத் நகரத்தில் உருவானதும், அவர் இல்லத்திலும் எப்போதும் உயிரோட்டத்துடன் அரசியல் சூழ்நிலை இருந்துவந்ததும் காரணங்களாகும்.

அலகாபாத் பல்கலைக் கழகத்தில் அவர் பயின்று வந்த காலத்தில் மாணவர் இயக்கங்களுடன் அவருக்கிருந்த பிணைப்புதான், இவரை அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்க உதவின. 2003ஆம் ஆண்டு இவரது திரைப்படமான ஹாசில் (Haasil), அலகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர் இயக்கங்களுக்கும் குண்டர் படைகளுக்கும் இடையே நடைபெற்ற தகராறுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அந்த சமயத்தில் இவரே ஒரு மாணவராக, நடைபெற்ற சம்பவங்களுக்கு ஒரு சாட்சியாக இருந்திருக்கிறார். அப்போது நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டே அத்திரைப்படத்தை எடுத்திருந்தார்.

2011இல் வெளியான சாகேப் பீவி அவுர் காங்க்ஸ்டர் (Saheb Biwi Aur Gangster) என்கிற திரைப்படமும் அரசியல் சம்பந்தப்பட்டதுதான். துலியா 1986இல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்.

இவரது முதல் திரைப்படமான ஹாசில் நாட்டில் மதவெறி சக்திகள் வன்முறை மூலமாக வளரத்தொடங்கியிருந்த காலத்தில் வெளிவந்தது. இதனை இப்படத்தில் அவர் மிகவும் நுணுக்கமாக வெளிக்கொண்டு வந்திருந்தார். அப்போது பாஜக-வின் மூலம் துளிர்விட்ட வன்முறை அரசியல் நூற்றாண்டின் இறுதியில் வலுவான சக்தியாக மாறி, ஆட்சியையே பிடித்துவிட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் அதன் பிரதமரானார். அதேசமயத்தில் அந்த சமயத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற மாநிலக் கட்சிகளும் வளரத் தொடங்கியிருந்தன.  இவை அனைத்தையும் இலைமறை காய்மறைவாக துலியா தன் படத்தில் காட்டியிருப்பார்.

படத்தில் வந்த கௌரிசங்கர் பாந்தே என்னும் கதாபாத்திரம் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவராகவும், அவரை எதிர்த்திடும் கதாபாத்திரமான ரன்விஜய் சிங், சமாஜ்வாதிக் கட்சியைச் சார்ந்தவராகவும் படத்தில் காட்டப்பட்டிருப்பார்கள். இதனை துலியா வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அவர்களின் வாக்குவாதங்களை ஆராய்பவர்கள் அதனை எளிதாக ஊகித்துணர முடியும்.

துலியா கம்யூனிஸ்ட் கட்சி எதிலும் உறுப்பினராக இருந்ததில்லை என்ற போதிலும், அவர் ஓர் இடதுசாரி சிந்தனையாளராகத்தான் இருந்தார், இருக்கிறார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்றகாலத்தில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கிய முற்போக்கு மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

“ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் அல்லது தில்லிப் பல்கலைக் கழகம் தவிர்த்து வேறெங்கும் அநேகமாக இப்போது இடதுசாரிகள் இல்லை. இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தவிர, மற்ற அனைத்து இடதுசாரி அமைப்புகளின் மாணவர் சங்கங்களும் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA-All India Students’ Association) என்கிற குடையின்கீழ் வந்துவிட்டன,” என்று துலியா கூறுகிறார்.

இடதுசாரி இயக்கம் எதையும் வக்காலத்து வாங்கவோ அல்லது விமர்சிக்கவோ துலியா தயாரில்லை. எனினும், பல்கலைக்கழக வளாகங்களில் இடதுசாரி சிந்தனைதான் மாணவர்கள் மத்தியில் குறைந்தபட்சம் நல்ல புத்தகங்களை வாசிக்க வகை செய்தன என்று துலியா சுட்டிக்காட்டினார். “அப்போதுதான் நாங்கள் சிறந்த எழுத்தாளர்களான கார்க்கி, டால்ஸ்டாய் நாவல்களைப் படித்தோம். சரியானமுறையில் சிந்திப்பதற்கான அடித்தளம் அப்போது எங்களிடையே ஏற்பட்டது. எங்களில் நல்ல மாணவர்களை இடதுசாரி இயக்கம்தான் உருவாக்கின,” என்று துலியா கூறுகிறார்.

சமீபத்தில் துலியா, வட இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் சிலவற்றின் வளாகங்களுக்குச் சென்றிருக்கிறார். தான் எடுக்கவிருக்கும் இணைய தொடர் ஒன்றுக்காக அவ்வாறு அவர் சென்றிருந்தார். அப்போது மாணவரிடையே காணப்படும் அரசியலை ஆராய்ந்திருக்கிறார். “அரசியலில் தற்போது காணப்படுவதுபோலவே மாணவர் அரசியலும் இருள் சூழ்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது,” என்று துலியா வருத்தத்துடன் கூறினார்.

“மாணவர்கள் மத்தியில் நுகர்வுக் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. எல்லாமே இப்போது பணத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. முன்பு அது தலைமை மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இப்போது அது பல்கலைக் கழகங்களில் நடைபெறும் பல வேலைகளுக்கு ஒப்பந்தங்களைப் பெறுவது எப்படி என்று மாறியிருக்கிறது,” என்றார்.

மேலும் துலியா, “மாணவர்கள் மத்தியில் தீவிர வலதுசாரிகள் வளர்ந்திருப்பதானது, இடதுசாரிகள் மீளவும் உருவாவதற்கும் வழிவகுத்திருக்கிறது,” என்கிறார்.

கெட்டிப்படுத்தப்பட்ட தத்துவம் ஒன்று வலதுசாரிகளிடம் இருக்கிறது, இல்லையேல் இடதுசாரிகளிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதமான தத்துவமும் கிடையாது. ஆனாலும், அது, தன்னை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்கிறது. “இடதுசாரிகள் இறந்திருக்கலாம், அல்லது இடதுசாரி என்று எவருமே இல்லாதும் இருக்கலாம். ஆனாலும், வலதுசாரிகள் இப்போதும் அரண்டுபோய்தான் இருக்கிறார்கள். யானை இறந்தால்கூட பயமுறுத்தும் என்கிற பழமொழிக்கிணங்க அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், திரைப்படக் கழகம் போன்ற நிறுவனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்,” என்று துலியா கூறுகிறார்.

எப்படி ஒருவர் வாக்களிக்க வேண்டும்?

துலியா, சமீபத்தில் வெளியிட்ட ‘எப்படி ஒருவர் வாக்களிக்க வேண்டும்?’ என்கிற தொலைக்காட்சித் தொடரில், நீங்கள் வாக்களிக்கும் நபர், இந்தியாவின் சமூகவலைப்பின்னலை அழிக்கக்கூடிய நபரா, இல்லையா என்பதை ஆராய்ந்துபார்த்து, வாக்களியுங்கள் என்று அறிவுறுத்துகிறார். இளைஞர்களிடம் அவர் உண்மையான பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு, அதாவது வேலைவாய்ப்புகள் போன்றவற்றை மனதில் இருத்தி வாக்களியுங்கள் என்கிறார். வரவிருக்கும் காலங்களில் தேர்தல்கள் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் வாக்களியுங்கள் என்கிறார். 2019 தேர்தல் கடைசித் தேர்தலாக இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார். வலதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அத்தகையதொரு நிலைமை ஏற்படலாம் என்கிற அச்சம் இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

“இப்போதுள்ள ஆட்சியாளர்கள் தற்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தினை மதிக்காதவர்கள்,” என்று அவர் கூறுகிறார்.

நரேந்திர மோடி அரசாங்கம் குறித்து துலியா, “எவர் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம். ஆனாலும் இதுபோன்ற ஒன்றாக அது இருக்கக்கூடாது. இப்போதைய ஆட்சி நாட்டை மட்டும் பாழாக்கிடவில்லை, மாறாக நாட்டு மக்களையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

“இவர்களின் ஆட்சியால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவுகள், சமூகச் சீரழிவுகளைக்கூட பின்னால் வரும் வேறோருவர் எளிதாகச் சரிசெய்திட முடியும். ஆனால், இவர்களால் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வெறுப்பு அரசியலால் வீணாகிப்போயுள்ள மக்களை யார் சரி செய்வது?” என்று துலியா மிகவும் கோபத்துடன் வினவினார்.

“இதுபோன்றதொரு நிலைமை முன்பு இருந்ததில்லை,” என்றும் “முன்பு பாஜக அரசாங்கம் இருந்தபோது கூட இந்த அளவுக்கு மோசமான நிலைமை இருந்ததில்லை,” என்றும் துலியா கூறினார்.

“நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ, அதைச் சொல்வதற்கான உரிமை என்னிடம் இருந்து பறிக்கப்படக்கூடாது. பல்வேறுவிதமான கருத்துக்களையும் சமூகம் கேட்டிட வேண்டும். நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளன். நீங்கள் ஒரு பத்திரிகையாளர். நான் என் கருத்தை என் படத்தில் சொல்ல அனுமதிக்கப்படாவிட்டால், நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் எழுத்தில் கொண்டுவர அனுமதிக்கப்படாவிட்டால், பின்னர் நான் படம் எடுப்பதில்தான் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் பத்திரிகையில் எழுதுவதில்தான் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று துலியா கவலையுடன் கேட்கிறார்.

(நன்றி: தி இந்து)

(தமிழில்: ச.வீரமணி)