tamilnadu

img

சிபிஐ, நிதித்துறை, நீதித்துறை சீர்குலைவுகளை தொடர்ந்து அடுத்த தாக்குதல் தேர்தல் ஆணையத்தையும் உடைத்தது பாஜக!

புதுதில்லி, மே 19-இந்தியாவில் மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ, இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புக்கள், தன் னாட்சி பெற்ற சுதந்திரமான அமைப்புக்கள் ஆகும். இவற்றை ஆட்சியாளர்கள் நேரடியாககட்டுப்படுத்த முடியாது. இந்த அமைப்புக் களின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் மட்டுமேகட்டுப்படுத்த முடியும்.ஆகவே, குறைந்தபட்சம் இந்த அமைப்புக்கள் ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாது என்று நீண்டகாலமாக சாமானியர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில்,மோடி தலைமையிலான பாஜக அரசானது, இந்த அமைப்புக்களை குதறியெடுத்து விட்டது.இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளிலேயே கை வைத்தது.கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய்,மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர்,அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். தீபக் மிஸ்ரா மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என்று பகிரங்கமாகவே செய்தியாளர்களிடம் பேசினர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்புஅப்போதுதான், நிகழ்ந்தது. இதற்கு காரணம் நீதித்துறையில் பாஜக அரசு செய்த தலையீடுகள்தான்.உத்தர்கண்ட் காங்கிரஸ் அரசை, குறுக்கு வழியில் பாஜக கவிழ்க்க முயன்றபோது, அதற்குதடை விதித்தவர், அப்போதைய உத்தர்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப். இவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரை செய்தபோது, அந்த பரிந்துரையை ஏற்காமல், மோடி அரசு திருப்பி அனுப்பியதெல்லாம் அப்போது நடந்தது.அதே ஆண்டு இறுதியில் சிபிஐ அமைப்புக்குள்ளும் பாஜக அரசு வேலையைக் காட்டியது.சிபிஐ அமைப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே, தங்களுக்கு வேண்டிய ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநராக நியமித்தது.

எதிர்பாராத விதமாக, அஸ்தானா லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டார். அவர் மீதுசிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா துறைரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, அஸ்தானாவை சஸ்பெண்ட் செய்தார். தங்களுக்கு விசுவாசமானவர் மாட்டிக் கொண்டதால், பரபரப்பு அடைந்த பாஜக அரசு,அஸ்தானாவைக் காப்பாற்றுவதற்காக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவையே அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. ஆர்எஸ்எஸ் பேர்வழிகளில் ஒருவரான நாகேஸ்வரராவை இரவோடுஇரவாக, தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் நியமித்தது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அலோக் வர்மா மீதான நடவடிக்கையைரத்துசெய்த பின்னும் மோடி அரசு ஒதுங்கவில்லை. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவைதீயணைப்புத்துறைக்கு பணிமாற்றம் செய்து பழிவாங்கியது. சிபிஐ அமைப்பு இரண்டு பிரிவானது.இந்த விஷயங்களாவது பரவாயில்லை. இந்திய ரிசர்வ் வங்கியை மோடி அரசு படுத்தியபாடு மிக மோசமானது. வராக்கடன் வசூலில் கறாராக இருந்தார் என்பதற்காகவும், பண மதிப்புநீக்க நடவடிக்கையை ஒப்புக் கொள்ளாததாலும், ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம்ராஜனை திட்டமிட்டு மோடி அரசு வெளியேற்றியது. தமக்கு வேண்டிய உர்ஜித் படேலை புதியஆளுநராக்கியது. அவர் மூலம் ரிசர்வ் வங்கியின்கையிருப்பு நிதி, இரண்டரை லட்சம் கோடி ரூபாயை சூறையாட வேண்டும் என்பதே இதன்பின்னிருந்த திட்டம். ஆனால், மனச்சாட்சியை அடகுவைக்க முடியாத உர்ஜித் படேல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே, ஆடிட்டர் குருமூர்த்தி போன்றஆர்எஸ்எஸ்-காரர்களை ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் நியமித்த மோடி அரசு,ரிசர்வ் வங்கிக்கு உள்ளும் இரண்டு கோஷ்டிகளை ஏற்படுத்தியது.இதுபற்றி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, பகிரங்கமாக வெளியில் கூறினார். “ரிசர்வ் வங்கி தொடர்புடைய ஒவ்வொரு முடிவுகளையும் மத்திய அரசு குறுகிய கண்ணோட்டத்தில் டி20 கிரிக்கெட் போட்டிபோன்று எடுக்கிறது.

அதற்கேற்ப எப்போதும் ஏதாவது தேர்தல் வந்தபடியே உள்ளது; ஆனால்,ரிசர்வ் வங்கியோ டெஸ்ட் கிரிக்கெட் போல செயல்படுகிறது; ஒவ்வொரு இன்னிங்சிலும் வெற்றி பெற முயற்சிப்பதோடு, அடுத்த இன்னிங்சில் வெற்றிவாய்ப்பை எதிர்பார்த்து தாக்குப் பிடிக்க முயற்சிக்கிறது” என்று சாடினார்.அதற்கு, “ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும், அவரது சக அதிகாரிகளும் மத்திய அரசு கூறுவதைத்தான் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் தாராளமாக வேலையை விட்டுச் சென்று விடலாம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி மகாஜன் மிரட்டினார். எதிர்பார்த்தபடியே உர்ஜித் படேலும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் இந்திய வரலாற்றில் முதன்முறையாக, பொருளாதாரம் படிக்காத ஒருவரை (சக்திகாந்த தாஸ்) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆக்கியது பாஜக அரசு. தற்போதுவரை அவர்தான் ஆளுநர்தான். ரிசர்வ் வங்கி சீர்குலைவும் நடந்து முடிந்தது.இதற்கு இடையேதான், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தனது கொடுங்கரங்களை பாஜக விரித்தது. தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு எதுவும் இல்லாமலேயே, பாஜக-வின்பிடிக்குள் சென்றுவிட்டது. தமிழகத்தில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதுதுவங்கி, அண்மையில் மேற்குவங்க தேர்தலைஒருநாள் முன்னதாக முடித்துக் கொண்டது வரை,அனைத்தும் பாஜகவின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.ஆனாலும், இதுபற்றி இவ்வளவு காலமும், எதிர்க்கட்சிகள் மட்டுமே விமர்சித்து வந்தன.ஆனால், தேர்தல் ஆணையத்தின் பாஜக சார்பை, 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவரானஅசோக் லவசா-வே தற்போது பகிரங்கப் படுத்தி இருக்கிறார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதாக 8 புகார்கள் வந்தும், அவற்றுக்கான ஆதாரங்கள் இருந்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்று போட்டு உடைத்துள்ளார். தேர்தல் தொடர்பான கூட்டங்களில், தான் இனிமேல் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மத்திய ஐந்தாண்டு ஆட்சியில், நீதித்துறை, நிதித்துறை, சிபிஐ ஆகியவற்றை மட்டுமே சீர்குலைக்க முடிந்தது என்ற கவலையில் பாஜக இருந்தது. தேர்தல் ஆணையம் மட்டுமேபாக்கி இருப்பதாக கருதியது. ஆனால், ஆட்சிமுடியும் தருவாயில் அந்த தன்னாட்சி அமைப்பையும் சீர்குலைத்து விட்ட நிம்மதியை பாஜக தற்போது அடைந்துள்ளது.