tamilnadu

img

மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும் -சிபிஎம்

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச் 31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செயலாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசாங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி பங்கினை மாநிலங்களுக்கு அளிக்கக்கூடிய நிலையில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் முதல் ஐந்தாண்டு காலத்திற்கு மத்திய அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகைகள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த இழப்பீடு என்பது, மாநில அரசாங்கங்கள் தங்களுடைய வருவாய்களைப் பெருக்கிக் கொள்வதற்காக மேற்கொண்டுவந்த மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக்கொண்டதை அடுத்து ஏற்படுத்தப்பட்டதாகும்.

இவ்வாறு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது ஜிஎஸ்டி சட்டத்தின் ஓர் அங்கமாகும். இதன் அமலாக்கம், ஜிஎஸ்டி கவுன்சிலால் மேற்கொள்ளப்படுகிறது.

இப்போது மத்திய அரசாங்கம் இந்த உறுதிமொழிக்கு எதிராகப் போகிறது. மத்தியில் அதிகாரத்தை மேலும் குவித்துக்கொள்ளும் விதத்திலும், நம் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் விதத்திலும் மாநிலங்களின் சட்டப்படியான வருவாய்களைப் பறிக்கும் விதத்திலும் சென்றுகொண்டிருக்கிறது. இதனை ஏற்க முடியாது. இந்த நிதித்தொகை இப்போது மாநிலங்களுக்கு அவசியத் தேவைகளாகும். அவை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒரே சிந்தனையுடன் செயலாற்ற இது அவசியமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏற்கனவே வலியுறுத்திக் கூறியிருப்பதைப்போல, கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதற்கு என்று கூறி, பிரதமர் பெயரில்,, தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, தணிக்கைக்கு உட்படுத்தப்படாத, வெளிப்படைத்தன்மையற்ற, நிதியத்தில் வசூலிக்கப்பட்டிருக்கிற தொகைகளை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளித்திட வேண்டும்.  ஏனெனில் மாநில அரசுகள்தான் இந்தப் பணியினை முன்னணியில் நின்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.  

2020-21க்கான முதல் காலாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை, மாநிலங்களுக்கு உடனடியாக மாற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. மாநில அரசுகள், கொரோனா வைரஸ் தொற்றை வலுவான முறையில் ஒழித்துக்கட்ட இது மிகவும் அவசியமாகும். மேலும் மத்திய அரசு இது தொடர்பாக அளித்துள்ள முந்தைய உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.