tamilnadu

img

அர்னாப்பை உடனடியாக விடுதலை செய்த உச்சநீதிமன்றம்... ஜாமீன் மனு மீது மின்னல் வேகத்தில் தீர்ப்பு

புதுதில்லி:
இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளியுமான அர்னாப் கோஸ்வாமிதாக்கல் செய்த ஜாமீன் மனு மீது, உச்ச நீதிமன்றம் ஒரேநாளில் விசாரணை நடத்தி தீர்ப்புவழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கட்டட உள்வடிமைப்பாளர் (interior designer) அன்வாய்நாயக்கை (53) தற்கொலைக்குத் தூண்டியதாக, அர்னாப் கோஸ்வாமி, கடந்த நவம்பர்4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நவிமும்பை தலேஜா சிறையில் அடைக்கப் பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை அலிபாக் செசன்ஸ் நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் நிராகரித்துவிட்டன.இதையடுத்து, அர்னாப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார். உச்சநீதிமன்றமும் அவரது மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுபோன்று ஏராளமானோர் ஜாமீன் கோரிதாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், அர்னாப்பின் மனு மட்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான சாமானிய குடிமகன்கள் ஜாமீன் கோரி காத்திருக்கும் நிலையில், அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன்இந்த சிறப்புச் சலுகை? மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு கூட இவ்வாறு அவசரமாக விசாரிக்கப்படவில்லையே.. அர்னாப் கோஸ்வாமி மனுக்களுக்கு மட்டும் அப்படி என்ன முன்னுரிமை? என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பார் அசோசியேஷன் தலைவருமான துஷ்யந்த் தவே பகிரங்கமாகவே கேள்வி எழுப்பினார்.

ஆனாலும், அர்னாப் மனு மீதான விசாரணையை ஒரேநாளில் முடித்து, அவருக்கு இடைக்கால ஜாமீனையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.தற்கொலைக்குத் தூண்டும் வகையில், இந்த வழக்கில் தீவிர உள்நோக்கம் (அர்னாப்பிற்கு) இல்லை என்றும், இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஒரு தனிநபரின் சுதந்திரத்தை மறுக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், ரூ. 50 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தி அர்னாப் உள்ளிட்டோர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அர்னாப்பை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிபப்ளிக் டிவி-யில் காட்டப்படும் விஷயங்களை மகாராஷ்டிர அரசு பெரிதுபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.இதனிடையே, பெண் காவலரைத் தாக்கிய வழக்கில் அர்னாப் மீண்டும் கைதுசெய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.