tamilnadu

img

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்போவது இல்லை!

புதுதில்லி:
வடகிழக்கு மாநிலங்கள் போன்ற கல்வி, சுகாதாரம் என பலவகைகளிலும் பின்தங்கிய மாநிலங்களை முன்னேற்றுவதற்கு, சிறப்புத் திட்டங்களையும், அவற்றைச் செயற்படுத்த கூடுதல் நிதிஒதுக்கீடும் வழங்குவது முக்கியமானது. இவ்வாறு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நடந்துள்ளன.

ஆனால், தற்போது அதுபோன்று எந்த மாநிலத்திற்கும் சிறப்புஅந்தஸ்து வழங்கப் போவது இல்லை என்று மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.ஆந்திரா, பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்நிலையில் அசாம் அல்லது வேறு ஏதாவது மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம்இருக்கிறதா? என மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கேள்வி எழுப்பினார். மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகாதா? என்றும் கேட்டிருந்தார்.

இதற்குத்தான், ‘மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை’ என இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்பதிலளித்துள்ளார். “எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என ‘நிதி ஆயோக்’ அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது இல்லை என்று ஏற்கெனவே முடிவு செய்து உள்ளது” என்று இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.