புதுதில்லி:
மருத்துவப் படிப்பில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக, வரும் 11ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பாஜக ஆட்சியின் இறுதிநாடாளுமன்றக் கூட்டத் தொடரில்,பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பாஜக ஆட்சி செய்துவரும் மாநிலங்களில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் உட்படச் சில மாநிலங்கள் இதனை அமல் படுத்தவில்லை.கடந்த 5ஆம் தேதியன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விரைவில் மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு கள் நாடெங்கும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழல், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை வரும் ஜூன் 11ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென்று காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றிப் பரிசீலனை செய்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.