பிரியங்கா காந்தியின் குர்தாவை இழுத்த உத்திரபிரதேச காவல்துறையினர் கடும் எதிர்ப்பையடுத்து மன்னிப்பு கேட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின இளம் பெண் சாதிய ஆதிக்க வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் கழுத்து எலும்பு முதுகெலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண் தில்லி சப்தர்ஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸ்க்கு இரவோடு இரவாக கொண்டு சென்ற போலீசார் புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தகனம் செய்தனர். பின்னர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவில்லை என்று ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி இருவரும் வியாழனன்று ஹத்ராஸ் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கினர். ஆனால் நொய்டா நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கார், காங்கிரஸ் எம்.பி.க்களின் சிறிய பேருந்து வந்ததும் அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ், தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது காவல் துறையினரின் நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுத்து அவரை தடுத்தார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் உத்திரபிரதேச காவல்துறை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் நொய்டா மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நடந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.