tamilnadu

img

பொருளாதார நெருக்கடி ஆழமாகிக்கொண்டிருப்பதற்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்கள்- இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

பொருளாதார நெருக்கடி ஆழமாகிக்கொண்டிருப்பதற்கு எதிராகவும், மக்களின் வறுமை அதிகரித்துக்கொண்டிருப்பதற்கு எதிராகவும் அகில இந்திய அளவில் எதிர்ப்பு இயக்கங்களை நடத்துமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருக்கின்றன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) கட்சியின் பொதுச் செயலாளர், திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர், தேவ பிரத பிஸ்வாஸ், மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர், கிஸ்ட்டி கோஸ்வாமி ஆகியோர் கூட்டாக இன்று (திங்கள் கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடதுசாரிக் கட்சிகள், வரும் 2019 செப்டம்பர் 20 அன்று மாலை 3 மணியளவில், புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப்பில் பொருளாதார நெருக்கடி ஆழமாகிக்கொண்டிருப்பதற்கு எதிராகவும், வேலையிழப்புகளுடன் மக்களின் வறுமை அதிகரித்துக்கொண்டிருப்பதற்கு எதிராகவும் தேசிய அளவில் அகில இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடுவதற்காக, சிறப்பு மாநாடு ஒன்றை நடத்துகின்றன.

பொருளாதார நெருக்கடியால் விழிபிதுங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் எதுவும் அளிப்பதற்குப் பதிலாக, மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக தனிப்பட்ட கார்ப்பரேட் கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கு வாரிவழங்க இருப்பதாக அறிவித்திருப்பது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதற்கே இட்டுச்  செல்லும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும் அதே சமயத்தில் நம் நாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் கட்டி எழுப்பிடக்கூடிய விதத்தில் மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளை அதிகரிப்பதே இன்றைக்குத் தேவையாகும்.  இதைச் செய்திட மத்திய அரசு முன்வரவில்லை.

எனவே மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்களை நாடு முழுதும் நடத்திட இச்சிறப்பு மாநாடு துல்லியமான முறையில் திட்டங்கள் தீட்டிட இருக்கிறது. இவ்வெதிர்ப்பு இயக்கங்களில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்று மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், வலுப்படுத்திடவும் வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)

 

;