புதுதில்லி:
இந்தியாவில் அடுத்த 3 மாதங்களுக்கு பெரிய அளவில் தனியார் வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று ‘மேன்பவர் குரூப்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘இந்தியாவில் வேலை உருவாக்கம்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வுகளை நடத்தி, அதன் முடிவுகளை மேன்பவர் குரூப் நிறுவனம் தற்போதுவெளியிட்டுள்ளது.
அதில், “இந்திய வேலைச்சந்தைமாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், 13 சதவிகித நிறுவனங்கள் மட் டுமே அடுத்த மூன்று மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க
உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, “61 சதவிகித நிறுவனங்கள் தங்களது சம்பளப் பட்டியலை அடுத்த மூன்று மாதங்களுக்கு மாற்றப் போவதில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளது.
“நிறுவனங்கள் தங்களது பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைக்காவிட்டாலும், அடுத்த மூன்று மாதங்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஆர்வமாக இல்லை” என்று ‘மேன்பவர் குரூப்’பின் சந்தைப்படுத்துதல் பிரிவுஇயக்குநர் சிந்தியா கோகலே தெரிவித்துள்ளார்.“இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 லட்சம் பேர் பட்டப் படிப்பை முடித்து கல்லூரிகளை விட்டு வெளியேறுகின்றனர். மறுபுறத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காணாமல் போகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.