மற்றுமொரு தேசபக்தர்
கிருஷ்ண மோகன் திரிபாதி
உத்தரப்பிரதேச மாநிலத்தின் உயர்நிலை மற்றும் இடைநிலைத்
தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர்
2017 ஜூலை 24 நாளிட்ட அமைச்சகத்தின் கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உயர்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவரான கிருஷ்ண மோகன் திரிபாதி என்பவர் கஸ்தூரிரங்கன் குழுவில் உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கிறார் என்று சொல்கிறது. ஆம் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் கல்வி அதிகாரிதான்.
குழுவின் உறுப்பினராக நியமனம் ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இந்த முன்னாள் உத்தரப்பிரதேச மாநிலக் கல்வி அதிகாரி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைப்புதான் அவருக்கு இந்த வரைவறிக்கை குழு உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தந்ததா என்பதில் சந்தேகம் கொள்ள வாய்ப்பில்லை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பாரதிய சிக்ஷா ஷோத் சன்ஸ்தன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. “லக்னோவில் உள்ள நிராலா நகரில் 1980ஆம் ஆண்டு வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தன் என்ற அமைப்பின் தலைமை ஆய்வு நிறுவனமாக பாரதிய சிக்ஷா ஷோத் சன்ஸ்தன் என்கிற தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிறுவனமானது, பாவ் ராவ் தேவ்ரஸின் தூண்டுதலால் அமைக்கப் பெற்றது. இந்திய தத்துவம், உளவியல், கல்வி, சமூக அறிவியல், புள்ளியியல், வரலாறு, ஆய்வு முறைகள் குறித்த ஏராளமான புத்தகங்களைக் கொண்டிருக்கும் நூலகம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பெயரிலான சிறு கலையரங்கம், உளவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், கருத்தரங்கக் கூடங்கள் என்று அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த ஆய்வு நிறுவனம் விளங்குகிறது” என்ற தகவல்கள் அந்த அமைப்பின் இணையதளத்தில் காணப்படுகின்றன. ஹெட்கேவருக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக இருந்த பாலாசாகேப் தேவ்ரஸின் இளைய சகோதரர்தான் இந்த பாவ் ராவ் தேவ்ரஸ்.
இந்த ஆய்வு நிறுவனத்தின் நான்காவது தலைவராக 2017 மே 14 முதல் இன்று வரையிலும் கிருஷ்ண மோகன் திரிபாதி இருந்து வருகிறார். வரைவறிக்கை அமைக்கப்பட்ட போது அமைச்சகம் குறிப்பிட்டவாறு அவர் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் கல்வி அதிகாரிதான் என்றாலும்கூட, திரிபாதியின் தொடர்புகள் எங்கே இருக்கின்றன, இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவரான இரண்டு மாதங்களுக்குள்ளாகவே தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவறிக்கை தயாரிக்கும் குழுவில் உறுப்பினராக அவர் நியமனம் பெற்றது ஆகியவற்றைத் தொடர்புபடுத்தினாலே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து விடும்.
மாட்டிக் கொண்ட தலித் துணைவேந்தர் ?
ராம் சங்கர் குரீல் ( பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்)
2017 ஜுன் 24 அன்று வரைவறிக்கை குழு நியமிக்கப்பட்ட போது பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராம் சங்கர் குரீல், 2018 டிசம்பர் 15 அன்று ஜவடேகருக்கு எழுதிய கடிதத்திலே அந்த பல்கலைக்கழகத்தின் முதல் மற்றும் முன்னாள் துணைவேந்தராகி விடுகிறார். இந்த வரைவறிக்கை குழு உறுப்பினர்களைப் பொறுத்த வரை இதுவொன்றும் பெரிய பிரச்சனை இல்லைதானே! இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்வதற்கு வழக்கம் போல அதிகாரத்தில் இருக்கும் எவருக்கும் மனம் வரப் போவதில்லையே… இந்த இடைப்பட்ட காலத்தில் குரீலின் துணைவேந்தர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதா அல்லது அவருக்கு என்னதான் நேர்ந்தது? பார்க்கலாம்.
தேசிய எண்ணெய் வித்துக்கள், தாவர எண்ணெய் வளர்ச்சித் துறையின் இயக்குநராகப் பணி புரிந்து வந்த குரீல் 2010ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் அமைந்திருக்கும் நரேந்திர தேவா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார். 2013ஆம் ஆண்டு துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்த பிறகு, இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் நகரில் அமைந்திருக்கும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தேசிய சமூக அறிவியல் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்கு தலைமை இயக்குநராகப் பணிபுரியும் வகையில் நியமனம் செய்யப்படுகிறார். இந்த சமூக அறிவியல் நிறுவனம் 2015ஆம் ஆண்டைய சட்ட விதிகளின்படி பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்படுகிறது. சமூகஅறிவியலுக்கென்று இந்தியாவிலேயே முதன்முறையாக தனித்த பல்கலைக்கழகமாக துவங்கப்பட்ட இந்த டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக ஐந்து ஆண்டுகளுக்கு குரீலை நியமனம் செய்து 2016 ஏப்ரல் 5 அன்று பல்கலைக்கழக வேந்தர் அறிவிக்கை வெளியிடுகிறார்.
2017ஆம் ஆண்டு பேராசிரியர் நாயக் என்பவரால் ’அரசியலமைப்புவாதம், ஜனநாயகத்திற்கான சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள பாபா சாகேப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்திருந்தார். அக்கருத்தரங்கத்தில் காங்கிரஸ் தலைவரான மோகன் பிரகாஷும் கலந்து கொண்டார். அவர்கள் இருவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வலதுசாரி ஆதரவாளர்கள் தலித் சமூகத்தில் பிறந்தவரும், மிகச் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான R.S.குரீல் மீது குற்றம் சுமத்தி பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே போராட்டத்தைத் துவங்கினர். மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் துணைவேந்தர் குரீல் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்த கருத்தரங்கத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று குரீல் தெரிவித்த போதிலும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதோடு, சிவராஜ் சௌகான் தலைமையிலான மாநில பாஜக அரசாங்கத்திற்கு நெருக்கடியும் கொடுத்தனர்.
இறுதியாக 2017 செப்டம்பர் 18 அன்று ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான O.P.கோலி 2015ஆம் ஆண்டைய பல்கலைக்கழகச் சட்டவிதிகளில் உள்ள பிரிவு 44இன் கீழ் குரீலை துணைவேந்தர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த நாளே மத்தியப் பிரதேச மாநில உயர்கல்வித்துறைச் செயலாளர் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். குரீல் வேளாண் அமைச்சகத்தில் எண்ணெய் வித்துக்கள் துறையின் இயக்குநராக மீளப் பணியமர்த்தப்பட்டார்.
பதவியிலிருந்து தன்னை நீக்கம் செய்தது தொடர்பான அறிக்கைகள் எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து போதிய விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கூறிய குரீல், துணைவேந்தர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக வேந்தருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். எவ்வித மறுப்பும் சொல்லாது, 2017 செப்டம்பர் 18 அன்று குரீல் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதால் இந்த வழக்கு விசாரிக்கப்படக் கூடாது என்பதே பல்கலைக்கழக வேந்தர் தரப்பில் முக்கிய வாதமாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டது. எந்தவித மறுப்பையும் தெரிவிக்காமல் தன்னுடைய குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், செப்டம்பர் 18 நாளிட்ட தன்னுடைய ராஜினாமா கடிதத்தை செப்டம்பர் 19 அன்று வேந்தருக்கு சமர்ப்பித்ததை அவர் மறுக்கவில்லை என்பதால் பல்கலைக்கழக வேந்தர் வெளியிட்ட அறிவிப்பிற்கெதிராக மனுதாரர் ஆட்சேபங்களை எழுப்ப முடியாது என்று கூறி குரீல் மீது எடுக்கப்பட்ட துணைவேந்தர் பதவி நீக்கம் சரியென்பதாக 2018 பிப்ரவரி 16 அன்று அந்த வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆக வரைவறிக்கை குழு அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே, குரீல் 2017 செப்டம்பர் 19 அன்றிலிருந்தே முன்னாள் துணைவேந்தராக, விவசாய அமைச்சகத்தின் இயக்குநராக மாறி விடுகிறார். துணைவேந்தராக இருந்த ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அதற்கெதிராக தொடர்ந்த வழக்கில் தோல்வியுற்ற நிலையில் நடைபெற்ற வரைவறிக்கைக் குழுக் கூட்டங்களில் என்ன மனநிலையுடன் அவர் கலந்து கொண்டிருக்கக் கூடும் என்பது இந்த வரைவறிக்கையில் தொழிற்கல்விக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கங்களில் (பக்கம் 293 – 308) வேளாண் கல்விக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கங்களின் எண்ணிக்கையில் (பக்கம் 301 – 303) இருந்தே புலப்படக்கூடும்.
”பல்கலைக்கழகக் கல்வியில் உள்ள பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக நிர்வாக ஆளுகை, தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் அவசியம் குறித்து மிகவும் விரிவான, சிந்தனைமிக்க, பொருத்தமான விவரங்களை பேராசிரியர் ராம் சங்கர் குரீல் வழங்கினார். மேலும் வேளாண் கல்வியின் சிக்கல்களைப் பற்றிய அவருக்கிருந்த ஆழமான புரிதல் விவசாயம் மட்டுமல்லாமல், பொதுவாக தொழில்முறைக் கல்வி தொடர்பான அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் மிக சுவாரஸ்யமான உள்ளீடுகளை எங்களுக்கு வழங்கியது” என்று பேராசிரியர் ராம் சங்கர் குரீல் குறித்த கஸ்தூரிரங்கனின் பாராட்டுதலுக்கான நியாயத்தை அந்த குழு உண்மையில் செய்திருக்க முடியுமா என்பதை யாரறியக் கூடும்?
கிருஷ்ண மோகன் திரிபாதி, ராம் சங்கர் குரீல் என்று இவர்கள் இருவரும்தான் வரைவறிக்கை வெளியிடப்பட்டு மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை எழுந்த போது, திருத்தப்பட்ட அந்த வரைவறிக்கை திருத்தப்பட்டிருக்கக் கூடாது என்று 2019 ஜூன் 3 அன்றே தங்களுடைய எதிர்ப்பை உடனடியாகப் பதிவு செய்தவர்கள். ”1986இல் புதிய கல்விக் கொள்கைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதற்குப் பின் ராமமூர்த்தி குழு மும்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. எந்த மொழியையும் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் தேசிய கல்விக் கொள்கை 2019ஐ வடிவமைத்த குழுவிடம் இருக்கவில்லை. மும்மொழிக் கொள்கைய அமல்படுத்தாமல் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அதனை முழுமையாக நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கு நான் உடன்படவில்லை” என்றார் திரிபாதி.
“நாங்கள் அனைவருமே கஸ்தூரிரங்கனை மதிக்கிறோம். குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, பொது மக்களிடம் கருத்து கேட்டு தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மாற்றுக் கருத்து வெளியானதை தொடர்ந்து இப்போது வரைவு திருத்தப்பட்டிருக்கிறது. மும்மொழிக் கொள்கை தொடர்பான, ஹிந்தி தொடர்பான கருத்துக்களை வரைவறிக்கையில் இருந்து நீக்குவது என்பது தேசிய மொழியாக ஹிந்தியை முன்னிறுத்துகின்ற தேசிய நோக்கத்தில் இருந்து திசை திருப்பி விடுவதாகவே இருக்கும். தேசிய ஒருங்கிணைப்பை மொழிகளால் ஏற்படுத்த முடியும் என்பதாலேயே மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நோக்கத்தையே இந்தக் குழுவும் வலியுறுத்தியது. ஒரு மாநிலம் அதனை ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இன்னும் எத்தனை முறைதான் இந்த அறிக்கையைத் திருத்திக் கொண்டே இருப்பது? அறிக்கை மீதான எதிர்வினைகளுக்காக அறிக்கையை திருத்தக் கூடாது. ஜுன் 30 வரை கருத்துக்கள் தெரிவிக்கப்படட்டும். அதன் பிறகு எந்த கருத்துக்களை வைத்துக் கொள்லலாம், எதனையெல்லாம் நீக்கி விடலாம் என்பதை அரசாங்கம் முடிவு செய்து கொள்ளட்டும்.” என்றார் குரீல்.
திரிபாதி, குரீல் ஆகியோரின் ஆட்சேபங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, “இந்தக் குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட, மொழிக் கொள்கையின் ஆன்மாவிற்கு மிக நெருக்கமான மற்றுமொரு வடிவம் ஏற்கனவே எங்களிடம் இருந்தது. அதனையே திருத்தப்பட்ட அறிக்கையில் பயன்படுத்தி இருக்கிறோம்’ என்றார் கஸ்தூரிரங்கன். ஆனால் அவ்வாறான மாற்றம் எப்போது செய்யப்பட்டது என்பது பல உறுப்பினர்களுக்குத் தெரியாது என்கிறார் குரீல். கடந்த டிசம்பர் மாதம் குழு உறுப்பினர்களிடையே இது குறித்து மின்னஞ்சல் மூலமாக நடத்தப்பட்ட விவாதத்தின் போது, மும்மொழிக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்வதாக வாசகங்கள் இருப்பதாக திரிபாதி தன்னுடைய ஆட்சேபங்களைத் தெரிவித்த வேளையில், மூன்று வகையான அறிக்கைகளை உறுப்பினர்கள் கொடுத்ததாகவும், அதில் ஹிந்தியைக் குறிப்பிட்டு இருந்த வாசகங்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு மே 31 அன்று அமைச்சர் பொக்ரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சர்ச்சை எழுந்த பிறகு பழைய வாசகங்களே மீண்டும் அந்த திருத்தத்தில் சேர்க்கப்படதாகவும் தெரிய வருகிறது. திரிபாதியின் ஆட்சேபத்திற்கான பின்னணியும், குரீல் மற்றும் கொஞ்சம் தாமதமாக ஆசிப் அளித்த ஆட்சேபம் ஆகியவற்றின் பின்னணியும் ஒன்றாக இருக்க முடியுமா?
கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு
விருதுநகர்.